ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் திருவடி சேவை

By எஸ்.கல்யாணசுந்தரம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் தாயார் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் அக்.4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உற்சவம் அக்.12-ம் தேதி நிறைவடைகிறது.

இதையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் ரங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து தினந்தோறும் மாலை புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். பெருமாள் கோயில்களில் பெருமாள் மற்றும் தாயாரின் திருவடிகளை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் கோயில் ரங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும்.

ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7ம் திருநாள் அன்று மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இந்த ஆண்டுக்கான ரங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.

இதையொட்டி, ரங்கநாச்சியார் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து தனது திருவடிகளை பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறே புறப்பட்டு கொலுமண்டபம் வந்தடைந்தார். இரவு 7.30 மணிக்கு கொலு தொடங்கி, இரவு 9.30 மணிக்கு நிறைவடைந்தது. அங்கிருந்து இரவு 10.30 மணிக்கு ரங்க நாச்சியார் புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாயாரின் திருவடிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தாயார் திருவடியை தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரியப்பன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE