மது, போதைப் பொருட்கள் இல்லாத சமுதாயம் உருவாக கும்பகோணத்தில் சர்வ சமய பிரார்த்தனை

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் பாமக அலுவலக வளாகத்தில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், உலக நலன் வேண்டியும், நாட்டில் விவசாயம், மழை வளம் செழிக்கவும், மது மற்றும் போதைப் பொருட்கள் இல்லாத சமுதாயம் உருவாக, சர்வ சமய பிரார்த்தனை மற்றும் சர்வ மங்கல மகா யாகம் இன்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று காலை கும்பகோணம் மகாமககுளத்தில் இருந்து புனித நீர் கடங்கள் மற்றும் வேதமந்திர பூஜை பொருட்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டு பிரதான வீதிகள் வழியாக, யாக சாலை நடைபெறும் பகுதிக்குச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை சிவபுரம் சிவாகம பாடசாலை முதல்வர் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும் மயிலாடுதுறை என்.செந்தில்நாத குருக்கள் முன்னிலையில் நடைபெற்ற சர்வ மங்கல மகா யாகத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, காமராஜர் சாலையில் உள்ள தூய அலங்கார அன்னை பேராலயம் மற்றும் சாரங்கபாணி தெற்கு வீதியில் உள்ள பெரிய பள்ளிவாசலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் மகள் காந்தி பரசுராமன், ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின் மற்றும் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE