மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மீது உயர் அழுத்த மோட்டார் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிப்பதற்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.
மதுரையில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவை ஒட்டி முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்வில் பாரம்பரிய முறைப்படி ஆட்டு தோலால் செய்யப்பட்ட பைகளில் தண்ணீர் நிரப்பி அதனை கள்ளழகர் மீது பீச்சி அடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக விரதம் இருந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.
கடந்த சில ஆண்டுகளால் இந்த நிகழ்வில் சிலர் தோல் பைக்கு மாற்றாக அதிக உயரழுத்த மோட்டார் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பீய்ச்சி அடித்து வருகின்றனர். இதன் காரணமாக, கள்ளழகர் சிலை, தங்கக் குதிரை, சுவாமியின் ஆபரணங்கள் ஆகியவை சேதமடைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சிலர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவ்வப்போது சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகளும் ஏற்பட்டன.
இதனால், உயர் அழுத்த மோட்டார் மூலம் சுவாமி சிலை மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது, உயர் அழுத்த மோட்டார் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிக்க கூடாது” என உத்தரவிட்ட நீதிமன்றம், “பாரம்பரிய முறைப்படி தோலால் செய்யப்பட்ட பைகளில் இருந்து மட்டும் தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும். அவ்வாறு தண்ணீரை பீய்ச்சி அடிப்பவர்கள் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், “நீதிமன்றத்தின் இந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படுவதை மதுரை காவல் ஆணையர், ஆட்சியர் ஆகியோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்புமிக்க கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!
கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!
வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!