தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சதுரகிரியில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம் , பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.
கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, வழுக்குப் பாறை , பாறை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் சதுரகிரி கோயில் அடிவாரப் பகுதியான தாணிப்பாறை பகுதி பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.