புரட்டாசி கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

By இரா.நாகராஜன்

திருத்தணி: புரட்டாசி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து, நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ளது சுப்பிரமணிய சுவாமி கோயில். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலுக்கு நாள் தோறும் தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து, திரளான பக்தர்கள் வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதுமட்டுமல்லாமல், மாதந்தோறும் கிருத்திகையின் போது, வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருவது வழக்கம்.

அந்த வகையில், புரட்டாசி கிருத்திகை தினம் என்பதால் இன்று (செப்.22) அதிகாலை திருத்தணி முருகன் கோயிலில் மூலவர் முருகனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மூலவர் முருகன், தங்க கவசம், வைர கிரீடம் உள்ளிட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

புரட்டாசி கிருத்திகை தினம் என்பதாலும் விடுமுறை நாள் என்பதாலும், சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட தமிழகப் பகுதிகள் மட்டுமல்லாமல், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணி முருகன் கோயிலில் குவிந்து, நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE