பக்தர்கள் அதிர்ச்சி... திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது!

By காமதேனு

திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை இன்று அதிகாலையில் கூண்டில் சிக்கியுள்ளது.

ஆந்திரா மாநிலம், திருப்பதியில் உள்ள திருமலை கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். திருப்பதி திருமலைக்கு அலிப்பிரிவழி நடைபாதை வழியாக பக்தர்கள் நடைபயணமாக கோயிலுக்கு செல்கின்றனர். கடந்த 11-ம் தேதி தனது குடும்பத்தினருடன் தினேஷ் என்பவர் ஆக.11-ம் தேதி நடைபயணமாக திருமலைக்கு வந்து கொண்டிருந்தார்.

சிறுத்தை உயிரிழந்த சிறுமி.

அப்போது ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்ற போது அவரது மகள் லட்சிதாவை சிறுத்தை இழுத்து சென்றது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீஸார் மற்றும் வனத்துறையினர் சிறுமியை தேடினர். இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுமியின் உடலை வனத்துறையினர் மீட்டனர்.

இதே போல ஒன்றரை மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் இரவு நேரத்தில் பெற்றோருடன் நடந்து சென்ற மூன்று வயது சிறுவனை சிறுத்தை தாக்கி வனப்பகுதியில் இழுத்துச் சென்றது. அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியரால், சிறுவன் மீட்கப்பட்டான். சிறுத்தை தாக்கியதால் படுகாயமடைந்த சிறுவனை மீட்ட போலீஸார், திருப்பதியில் உள்ள தேவஸ்தான குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக திருப்பதி மலையில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கூண்டுகளை அமைத்துள்ளனர். அந்த கூண்டில் ஜூலை 22-ம் தேதி ஒரு சிறுத்தை சிக்கியது. ஆக.14-ம் தேதி மற்றொரு பெண் சிறுத்தை சிக்கியது. ஆகஸ்ட் 17-ம் தேதி மூன்றாவதாக ஒரு சிறுத்தை பிடிபட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை நான்காவதாக ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது. இந்த சிறுத்தையை திருப்பதியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் பக்தர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE