கோயில் உண்டியலில் ரூ.100 கோடி காணிக்கை! பக்தரை வலைவீசித் தேடும் நிர்வாகம்!

By காமதேனு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில். ஆந்திராவின் பிரபலமான வைணவ ஆலயங்களில் ஒன்றான இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வாடிக்கை. அதன்படி நேற்று கோயில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் போது, உண்டியலில் இருந்த காசோலை ஒன்றை எடுத்து பார்த்துள்ளனர். அதில் 100 கோடி ரூபாய்க்கு கோயில் பெயரில் காணிக்கையாக எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்து, அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி

கோயில் வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு பக்தர் காணிக்கை செலுத்தியுள்ள சம்பவத்தால் சந்தேகமடைந்த அதிகாரிகள் இது குறித்து விசாரித்தனர். அந்த காசோலையில் உள்ள தகவல்களின் படி பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு காசோலை அது என்பது என தெரிய வந்தது. காசோலை எம்விபி டபுள் ரோடு கோடாக் வங்கிக் கிளையின் பெயரில் இருந்தது. அதிலும் வராஹ லக்ஷ்மி நரசிம்ம தேவஸ்தானம் என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலையில் முதலில் ரூ10 என்றும், பிறகு அதை அடித்து 100 கோடி எனவும் எழுதப்பட்டிருந்தது.

சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில்

இதனால், அதிகாரிகள் அனைவருக்கும் ஆர்வமும், சந்தேகமும் ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள் வங்கிக்குச் சென்று பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு குறித்த தகவல்களை கூறினர். அப்போது அவரது கணக்கில் ரூ.17 மட்டும் இருப்பு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, காசோலையை காணிக்கையாக போட்டவரின் தகவல்களை கண்டறியும் முயற்சியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அவரை கண்டுபிடித்து, இனி இது போன்ற செயலில் ஈடுபடாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். கோயில் உண்டியலில் மோசடியாக செக் போட்ட நபரின் செயலால், பக்தர்களும், நிர்வாகத்தினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE