ஆடி அமாவாசை: இதை தானம் செய்தால் வாழ்வில் சந்தோஷம் நிச்சயம்!

By காமதேனு

அமாவாசையன்று தானங்கள் செய்வதும் முன்னோரை வணங்குவதும் வாழ்வில் எண்ணிலடங்காத பலன்களை நமக்கு வழங்கும். இதுவரை பட்ட துன்பங்களில் இருந்து நிம்மதியும் நிறைவும் பெற்று வாழ்வில் சந்தோஷத்தை உணரலாம்.

பித்ருக்களுக்கான முக்கியமான நாட்களில், அமாவாசை தினம் மிக மிக விசேஷமானது என்கிறது சாஸ்திரம். உத்தராயன புண்ய காலத்தின் தொடக்கத்தில் தை மாதத்தில் வருகிற தை அமாவாசை, தட்சிணாயன புண்ய காலத்தையொட்டி வருகிற ஆடி அமாவாசை, அதன் இரண்டு புண்ய காலங்களுக்கு நடுவே புரட்டாசி மகாளயபட்ச காலத்தில் வருகிற புரட்டாசி அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் சாந்நித்தியம் மிக்கவை.

ஆடி அமாவாசை என்பது ரொம்பவே முக்கியம். இந்நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அமாவாசை நாளில் கடற்கரையிலும், நதிக்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வார்கள். வீட்டில் இருந்தும் வழிபடலாம். தர்ப்பணம் செய்யலாம். முன்னோர் ஆராதனை செய்து வழிபடலாம். மற்ற நாட்களில் இப்படி நீர்மார்க்கத்தில் நீராடினாலே புண்ணியம். குறிப்பாக, அமாவாசை நாளில், நீராடுவது மகா புண்ணியம்!

அமாவாசை நாளில், நாம் செய்கிற தர்ப்பண ஆராதனைகள், முன்னோர்களுக்கான வழிபாடுகள், செய்கின்ற தான தருமக் காரியங்கள் என பலவற்றாலும் பித்ருக்கள் நம் செயலால் குளிர்ந்து போகிறார்கள். நம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.

பொதுவாகவே, நாம் எப்போது தானம் செய்தாலும் புண்ணியம். தரும காரியங்களை எந்நாளில் செய்து வந்தாலே முந்தைய பிறவியின் பாவங்கள் நீங்கப் பெறும் என்கின்றன சாஸ்திரங்கள். முக்கியமாக, அமாவாசை நாளில், நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற ஒவ்வொரு தானத்துக்கும் ஒவ்வொருவிதமான பலன்கள் உள்ளன.

அமாவாசை நன்னாளில், நம் முன்னோரை நினைத்து எவருக்கேனும் உணவுப் பொட்டலம் தானம் செய்தால், நம் வீட்டில் இருந்த வறுமை நிலை மாறும். தனம் தானியம் பெருகும். கடன் பிரச்சினையில் இருந்து மீளலாம்.

யாருக்கேனும் வஸ்திர தானம் செய்து வேண்டிக்கொண்டால், நம் ஆயுள் அதிகரிக்கும். ஆரோக்கியம் அதிகமாகும். தீராத நோயெல்லாம் தீரும். வாழையடி வாழையென நம் சந்ததி செழித்தோங்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE