24 நாட்களில் 3.30 லட்சம் பேர் தரிசனம்.. அமர்நாத்தில் குவியும் பக்தர்கள் கூட்டம்!

By காமதேனு

இமயமலையில் காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இந்த ஆண்டு யாத்திரை தொடங்கிய 24 நாட்களில் 3.30 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக கோயில் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகையில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில் உருவாகும் பனி லிங்கத்தை கண்டு தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம்.

உறைய வைக்கும் கடுங்குளிரில் மிகுந்த ஆபத்துக்களுடன் கூடிய இந்த பயணத்தை ஆன்மிகவாதிகள் மிகவும் விருப்பத்தோடும், பக்தியுடனும் மேற்கொள்கிறார்கள்.

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கிய நிலையில், பலத்த பாதுகாப்புடன் தினந்தோறும் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்து வருகிறார்கள். யாத்திரை தொடங்கி 24 நாட்கள் ஆகி உள்ள நிலையில் இதுவரை 3.30 லட்சம் பேர் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளதாக கோயில் வாரியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, 3,000 பேர் அடங்கிய பக்தர்கள் குழுவினர் நேற்று காலை பகவதி நகரில் இருந்து புறப்பட்டனர். இதில் 1,865 பேர் பஹல்காம் பாதையிலும், 1,160 பேர் பால்டால் வழியாகவும் சென்றனர். அமர்நாத் யாத்திரையில் இந்த ஆண்டு இதுவரை 36பேர் இறந்துள்ளனர். மொத்தம் 62 நாள்கள் நடைபெறும் யாத்திரை ஆகஸ்ட் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE