சாமித்தோப்பு தலைமைப்பதியில் வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா கலிவேட்டை: குவிந்த பக்தர்கள்!

By எல்.மோகன்

நாகர்கோவில்: சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி திருவிழாவில் வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் 11 நாள் ஆவணி திருவிழா கடந்த 23ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை வரை விழா நடைபெறுகிறது.

திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி, சமய சொற்பொழிவு ஆகியவை நடைபெற்று வருகிறது. 8ம் திருவிழாவான நேற்று இரவு அய்யா வைகுண்டர் வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமித்தோப்பு தலைமைப்பதி முன்பிருந்து புறப்பட்ட வாகனம் நான்குரத வீதிகளை சுற்றி வந்து முத்திரி கிணற்றங்கரையை அடைந்தது.

விழாவில் பங்கேற்ற பக்தர்கள் காவி உடையணிந்து நெற்றியில் திருநாமம் தரித்து தலைப்பாகை அணிந்தவாறு அய்யா அரகர.... சிவசிவா என பக்தி கோஷங்களை எழுப்பினர். வெள்ளை குதிரை வாகனம் சாமித்தோப்பில் செட்டிவிளை, சாஸ்தான் கோவில்விளை, கோட்டையடிபுதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக சுற்றி இரவு 11 மணியளவில் சாமித்தோப்பு தலைமைப்பதியை அடைந்தது.

அங்கு திரண்டிருந்த பக்தர்கள் வெற்றிலை பாக்கு, பழங்களை அய்யாவிற்கு சுருள் வைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பதியின் வடக்கு வாசலில் தவக்கோலத்தில் வீற்றிருந்த அய்யா பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். விழா நிறைவு நாளான 2ம் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. பின்னர் நள்ளிரவில் காளை வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE