காக்கும் கார்த்திகைச் செல்வன் - 30

By கே.சுந்தரராமன்

திருவள்ளூர் மாவட்டம், வானகரம் ஊராட்சியில் அமைந்துள்ள சுவாமிநாத பாலமுருகன் கோயில், முக்கியத்துவம் பெற்ற முருகப்பெருமானின் கோயில்களுள் ஒன்றாக விளங்குகிறது. இத்தலத்தில் உள்ள கந்தனின் கன்னத்தில் மச்சம் இருப்பது தனிச்சிறப்பு.

போரூர் தோட்டம் தொழிற்பேட்டையில் உள்ள வானகரம் மேட்டுக்குப்பத்தில் இத்தலம் அமைந்துள்ளது. போரூர் ரவுண்டானாவில் இருந்து ஆற்காடு சாலையில் பயணித்து, காரம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இடது புறம் சென்றால் போரூர் தோட்டம் தொழிற்பேட்டையை அடையலாம்.

தல வரலாறு

வேடர் குலத்தின் தலைவர் நம்பிராஜனின் மகளாக அவதரித்த வள்ளி, திருத்தணி மலையில் தனது தோழியருடன் தங்கியிருந்தாள். ஒருநாள் முருகப்பெருமான் முதியவர் வேடம் தாங்கி, வள்ளியை தேடிச் சென்றார். முதியவரைக் கண்டு ஒதுங்கிய வள்ளி, அவரை நோக்கி, “முதியவரே! கன்னியர் இருக்கும் இடத்தில் உமக்கு என்ன வேலை?” என்று கேட்டாள். இதைக் கேட்டதும் முருகப்பெருமான் அங்கிருந்து கிளம்பினார்.

மறுநாள் இளைஞர் வடிவம் தாங்கி அதே இடத்துக்குச் சென்றார் முருகப்பெருமான். அவரை அடையாளம் கண்டுவிட்ட வள்ளி, “என்ன முதியவரே! தினம் ஒரு வேடத்தில் வருகிறீர்களே? நேற்று முதியவர் வேடம். இன்று இளைஞர் வேடம்... இதற்கான காரணம் என்ன?” என்று வினவினாள்.

தான் வேடம் மாறி வந்ததை எப்படி வள்ளி உணர்ந்தாள் என்று முருகப்பெருமான் ஆச்சரியப்பட்டார். உடனே வள்ளியை நோக்கி, “என்னை எப்படிக் கண்டுபிடித்தாய்?” என்று கேட்டார். அதற்கு முருகப்பெருமானின் கன்னத்தை சுட்டிக்காட்டிய வள்ளி, “உம்மை இந்த மச்சம்தான் காட்டிக் கொடுத்தது” என்று கூறினாள். வள்ளியின் ஞானத்தை முருகப் பெருமான் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியின் அடிப்படையிலேயே இத்தலத்தில் முருகப்பெருமான் வலது கன்னத்தில் மச்சத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த அருட்காட்சி மிகவும் அபூர்வமானதாகக் கருதப்படுகிறது. இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முருகப்பெருமானை ‘மச்சக்காரன்’ என்றே அழைக்கின்றனர்.

தினைப்புனம்

தினை விளையும் பூமியாக திருத்தணி இருந்தது. அங்குள்ள வேடுவர்கள் தினை உள்ளிட்ட சிறுதானியங்களை பயிர்செய்து அவற்றை தங்கள் குல தெய்வமான முருகப்பெருமானுக்கு படைத்து வழிபாடு செய்வது வழக்கம். தினைப்புனம் என்பது உலக இன்பத்தைக் குறிக்கிறது. இது தொடர்பாக ஓர் உட்கருத்து கூறப்படுகிறது.

உலகில் மனிதர்கள் பிறந்ததும், இன்பங்களில் மூழ்கித் திளைக்கின்றனர். எது நிஜம், எது நிரந்தரம் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. அவர்கள் எதிர்காலம் குறித்த எவ்வித கவலையும் இன்றி உள்ளனர். மரணத்தைப் பற்றியும் அவர்கள் சிந்திப்பதில்லை. இவ்வுலகிலேயே பல ஆண்டு காலம் வாழப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உலக இன்பத்தில் மூழ்கிக் கிடக்கும் உயிர்கள் அனைத்தையும் தானே வலிய தேடிச் சென்று அவர்களை ஆட்கொள்ள இறைவன் (முருகப் பெருமான்) திருவுள்ளம் கொள்கிறார்.

உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கருணையோடு அருள்பாலிப்பவராக முருகப்பெருமான் உள்ளார். உயர்ந்த குலத்தில் பிறந்த தெய்வானையை மணந்த முருகப்பெருமான், தாழ்ந்த குலத்தில் பிறந்த வள்ளியையும் மணம் முடிக்க (ஆட்கொள்ள) திருவுள்ளம் கொண்டார். இறை சிந்தனை இல்லாத உயிர்கள் அவனைப் பற்றி நினைப்பதில்லை. வள்ளியும் முருகப்பெருமானைக் கண்டு ஒதுங்கி ஓடினாள். பின்னர் விநாயகப் பெருமானின் உதவியுடன் முருகப்பெருமான் வள்ளியை மணம் முடித்தார். இதனால் தன்னிடம் ஈர்ப்பு இல்லாது ஒதுங்கும் மக்களையும் அரவணைத்து அருளும் குணம் கொண்டவர் முருகப்பெருமான் என்பது புனலாகிறது.

உலக இன்பத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இறை இன்பத்தில் திளைக்க ஒவ்வொரு உயிரும் முயற்சி செய்யாவிட்டாலும், இறைவனே அவர்களை காக்க ஓடோடி வருகிறான் என்பதுதான் இதன் பொருளாக விளக்கப்படுகிறது.

கோயில் அமைப்பும் சிறப்பும்

முருகப்பெருமான் இத்தலத்தில் மயில் விமானத்தின் கீழ் பாலமுருகனாக, இடுப்பில் கை வைத்தபடி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் மயில் கிடையாது. விசேஷ நாட்களில் முருகப்பெருமான் கன்னத்தில் மச்சம் உள்ள இடத்தில், குங்குமம் வைத்து அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது மட்டுமே மச்சம் பக்தர்களின் கண்களுக்குத் தெரியும். மற்ற நாட்களில் எண்ணெய் காப்பு இடப்படுவதால், இந்த மச்சத்தைக் காண முடியாது.

ஒவ்வொரு நாளும், அந்த நாளுக்கான கிரகங்களுக்கு உரிய நிறத்தை கருத்தில் கொண்டு, அதே நிற வஸ்திரத்தை முருகப் பெருமானுக்கு அணிவிக்கிறார்கள். கிரக தோஷம் உள்ளவர்கள் அந்த கிரகத்துக்கான நிற வஸ்திரத்தை முருகப்பெருமானுக்கு அணிவித்து தோஷத்துக்கு பரிகாரம் செய்கிறார்கள்.

முருகப்பெருமான் சந்நிதிக்கு வலதுபுறம் வலம்புரி விநாயகர் சந்நிதி உள்ளது. அம்பிகையில் இருந்து தோன்றியவர் என்பதால் இவர் சக்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். அதன்படி அம்பாளுக்கு உரிய ஸ்ரீசக்கரம், விநாயகரின் (சக்தி விநாயகர்) சந்நிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பிரகாரத்தில் சீதாபிராட்டி, லட்சுமணருடன் ராமபிரான், ஆஞ்சநேயர், யோக நரசிம்மர், சனீஸ்வரர், விஷ்ணு துர்கா லட்சுமி, பைரவி சமேத ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஆதி சேஷ நாராயண பெருமாள் சந்நிதிகள் உள்ளன.

சக்தியின் உருவகம், வீரத்தின் தெய்வம், அனைத்து எதிர்மறை சக்திகளையும் அழிப்பவளாக விஷ்ணு துர்கா லட்சுமி உள்ளாள். மகாலட்சுமியின் அவதாரமாகக் கருதப்படும் இவள் கைகளில் சங்கு, சக்கரத்துடன் காணப்படுகிறாள். தர்மம், பக்தி, பணிவு, வீரம் ஆகிய அனைத்தையும் உடைய யோக ஆஞ்சநேயர் சிறப்பு வாய்ந்த சாளக்கிராம மாலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளார். சனீஸ்வரருக்கு தனி சந்நிதி உள்ளது குறிப்பிடத்தக்கது. தலவிருட்சத்தின் கீழ் பால கோபாலகிருஷ்ணர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேம்பு மற்றும் அரச மரத்தடியில் உள்ள சிவலிங்கத்துக்கு (சிவ வனதீஸ்வரர்) பிரதோஷ காலங்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்.

கோயிலின் உள்ளே இருக்கும் கோசாலையில் வெள்ளிக்கிழமைகளில் கோபூஜை நடைபெறும். இங்கு கிடைக்கும் பால், கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படும். சதய நட்சத்திர தினத்தில் அகஸ்திய முனிவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.

மருத்துவர் கட்டிய கோயில்

டாக்டர் வரதராஜன் என்ற பிரபல மருத்துவர், சென்னை வடபழனி கோயிலை நிறுவிய மூன்று சித்தர்களின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். தன்னுடைய இலவச மருத்துவ சேவை தவிர, பல ஆன்மிகப் பணிகளையும் செய்து வருகிறார். சித்தர்களின் ஆணைப்படி இத்தல முருகப்பெருமானுக்கு கோயில் எழுப்பினார். முருகப்பெருமானுக்கு மச்சம் இருந்ததை அறிந்து மருத்துவர் உள்ளிட்ட பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர். கடந்த 2014-ம் ஆண்டு, இக்கோயிலுக்கு புதியதாக ராஜ கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆடிக் கிருத்திகை, ஆடி வெள்ளி, ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கந்த சஷ்டி, காரத்திகை தீபம், ஹனுமத் ஜெயந்தி, கல்யாண உற்சவம், ஆங்கிலப் புத்தாண்டு, தைப் பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், ஸ்ரீராமநவமி உற்சவம், சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட தினங்களில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சுவாமி வீதியுலா புறப்பாடும் உண்டு. அத சமயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக் கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

பங்குனி உத்திர உற்சவத்தில் தேர்த் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் கிருத்திகை, அமாவாசை, சஷ்டி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

கர்ம வினைகள் நீங்க சக்ர விநாயகர் வழிபாடு, கடன் தொல்லை நீங்க விஷ்ணு துர்கா லட்சுமி வழிபாடு, செல்வம் சேர சுவர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு, குழந்தைப் பேறு கிடைக்க முருகப் பெருமான் வழிபாடு நடைபெறுகின்றன. இரண்டு விளக்கேற்றி, மச்சக்கார வேலனை வழிபட்டால், விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. கார்த்திகை நட்சத்திர தினத்தில், பேச்சு வராத குழந்தைகள் நாக்கில், ஓம் எழுதினால் அவர்களுக்கு விரைவில் பேச்சு வரும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறியதும், பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து இறைவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபடுகின்றனர்.

அருகில் உள்ள கோயில்கள்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், கூவம் திரிபுராந்தகர் கோயில், திருக்கண்டலம் சிவா நந்தீஸ்வரர் கோயில், பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில், திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோயில், ஊத்துக்கோட்டை பாபஹரேஸ்வரர் கோயில், தண்டலம் தடுத்தாலீஸ்வரர் கோயில், ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் கோயில், திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோயில், திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோயில், மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில் ஆகிய கோயில்கள் இத்தலத்துக்கு அருகே உள்ள கோயில்களாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE