சிதம்பரம் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனத்தை தடுக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு 

By KU BUREAU

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில், ஆறு கால பூஜை நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுக்க கூடாது என தீட்சிதர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில், ஆனி திருமஞ்சன விழாவின் போது, கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை. ஆறு கால பூஜை நேரத்தில் மட்டும் பக்தர்கள் கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படுவதில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் விழாக்காலங்களில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்யத் தீட்சிதர்கள் அனுமதிப்பதில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘ஆறு கால பூஜை நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்வதைத் தடுக்கக் கூடாது’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE