மகாளய அமாவாசையில் தர்ப்பணம்: முக்கடல் சங்கமிக்கும் குமரியில் குவிந்த மக்கள்!

By காமதேனு

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

அமாவாசை தர்ப்பணம் / சிரார்த்தம் / மகாளய அமாவாசை

ஒவ்வொரு ஆண்டும் தை, ஆடி, புரட்டாசி அமாவாசை தினங்களில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி இன்று அதிகாலை 4 மணி முதலே முக்கடல் சங்கமத்தில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகளவில் காணப்பட்டது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள், அதன் பின்னர் கடற்கரை பரசுராம விநாயகரை வழிபட்டனர்.

பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு ஏராளமான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன.

அமாவாசை தர்ப்பணம் / சிரார்த்தம் / மகாளய அமாவாசை

இதேபோல் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். குழித்துறையில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு முன்னோர்களின் நினைவாக மரக்கன்று, அல்லது செடிகளை வாங்கி நடுவதும் வழக்கம். குழித்துறையிலும் இதனால் பக்தர்கள் கூட்டம் களைகட்டியது.

மகாளய அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி, குழித்துறை உள்ளிட்ட தர்ப்பணம் கொடுக்கும் பகுதிகள் மட்டுமல்லாது, இராமேஸ்வரம், திருச்சி அம்மா மண்டபம் என முக்கிய சுற்றுலாத்தலங்களிலும் அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE