சபரிமலையில் தமிழக பக்தர்கள் மீது கொடூர தாக்குதல்... கேரள போலீஸ் அடாவடி

By காமதேனு

சபரிமலையில் தரிசனத்திற்கு சென்ற தமிழக பக்தர்கள் 18ம் படி அருகே கேரள போலீஸாரால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஐயப்ப பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகில் உள்ள சபரிமலைக்கு தமிழகத்திலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி சென்று வருகின்றனர். மற்ற எந்த மாநிலங்களையும் விட தமிழக பக்தர்களே அதிகம் சென்று வழிபட்டு வருகின்றனர். அதனால் தமிழக பக்தர்களுக்கு அங்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு கோயில் நடை திறக்கப்பட்டது முதல் தமிழக பக்தர்கள் புறக்கணிக்கப்பட்டும், அலட்சியப்படுத்தப்பட்டும் வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிக அளவு பக்தர்கள் வருவதால் கேரள பக்தர்களை எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனுமதிக்கும் அம்மாநில போலீஸார், தமிழக பக்தர்களை பல மணி நேரம் காக்க வைக்கின்றனர். தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்கள் சுமார் பத்து மணி நேரத்திற்கும் குறையாமல் காத்திருந்து சன்னிதானம் செல்ல வேண்டி உள்ளது.

பக்தர்கள்

அங்கும் கூட்டத்தை கட்டுப்படுத்த எவ்வித முயற்சிகளையும் செய்யாததால் கூட்டத்தில் சிக்கி திணறி வருகிறார்கள். இதனால் பலரும் சன்னிதானம் செல்லாமலே திரும்பி வருகின்றனர். இவ்வளவு சிரமங்களுக்கிடையே சன்னிதானம் செல்லும் பக்தர்களை கேரள போலீஸார் நேற்று கடுமையாக தாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று தஞ்சாவூரை சேர்ந்த தயானந்த் (24) என்ற பக்தர் உள்பட சிலர் 18ம்படி அருகே தரிசனத்துக்காக நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த கேரள போலீஸின் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படையைச் சேர்ந்த போலீஸார் தயானந்தை தாக்கியதாக கூறப்படுகிறது. அவருடன் வந்தவர்கள் அதை தட்டிக் கேட்டனர். அதனால் அவர்களையும் போலீஸார் தாக்கியுள்ளனர்.

போலீஸ் தாக்கியதில் தயானந்தின் கழுத்து, நெஞ்சு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சன்னிதானத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தயானந்த் சன்னிதானம் போலீஸில் புகார் அளித்துள்ளார். தமிழக பக்தர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஐயப்ப பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE