கிருஷ்ணகிரியில் நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் கோலாகலம்

By KU BUREAU

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 38-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இதையொட்டி, லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்தது.

கடந்த 15-ம் தேதி சிறப்பு பூஜையுடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. தொடர்ந்து, நரசிம்மர் 16-ம் தேதி அன்னபட்சி வாகனத்திலும், 17-ம் தேதி சிம்ம வாகனத்திலும், 18-ம் தேதி, ஆஞ்சநேயர் வாகனத்திலும், 19-ம் தேதி சேஷ வாகனத்திலும் எழுந்தருளி நகர் வலம் வந்து பக்தர்களுக்குச் சேவை சாதித்தார். நேற்று காலை 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜையைத் தொடர்ந்து பிரகார வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. காலை 10 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.

பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி அன்னையருடன் சிறப்பு அலங்காரத்தில் நரசிம்ம சுவாமி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு, இன்று (மே 21-ம் தேதி) காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா சுதர்சன ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், பூர்ணாஹூதி, மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரகார உற்சவமும், இரவு, யானை வாகனத்தில் நரசிம்மர் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது.

தொடர்ந்து, வரும் 23-ம் தேதி குதிரை வாகனத்திலும், 24-ம் தேதி சந்திர பிரபா வாகனத்திலும், 25-ம் தேதி புஷ்ப பல்லக்கிலும் சுவாமி எழுந்தருளி நகர் வலம் வந்து பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறார். வரும் 26-ம் தேதி ஊஞ்சல் உற்சவமும், 27-ம் தேதி விடையாற்றி உற்சவமும், 28-ம் தேதி 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கவுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE