நிலை தடுமாறிய தேரை நகர்த்திய யானை: திருவையாறு ஐயாறப்பர் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தில் நெகிழ்ச்சி

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான, அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயிலில், ஆடிப்பூர பெருவிழா கடந்த ஜூலை 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் தர்மாம்பாள் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஏராளமான பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ராஜ வீதிகள் வலம் வந்து மதியம் தேர் நிலையை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் உத்தரவின் பேரில், கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

இந்நிலையில் தேரானது கீழ வீதியில், நிலைக்கு வந்த போது தேரை இழுத்த பெண்கள் சற்று தடுமாறியதால், தேர் நிலையில் நிறுத்த முடியாமல் அவதியடைந்தனர். அப்போது கோயில் யானை தர்மாம்பாள் தனது துதிக்கையால், தேரின் முன்பக்க சக்கரத்தை பின்னுக்கு தள்ளி, தேரை மெதுவாக நிலையில் நிறுத்தியது. இதை கண்ட பெண்கள், பக்தர்கள் வியப்படைந்து கைதட்டி உற்சாகப்படுத்தினர். கோயில் யானையின் இந்த செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE