கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அன்னை பகவதி அம்மன் கோவில் கொண்டிருக்கிறார். ஆண்டு முழுக்க அன்னைக்கு பல்வேறு உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. வைகாசி 10 நாள் உற்சவம் வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவில் வெவ்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா வருகிறார்.
தேர்த் திருவிழாவான ஜூன் 1-ம் தேதி காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. தேர் ரதவீதி வலம் வந்து மதியம் நிலையம் சேர்கிறது. 10-ம் திருவிழாவான 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும்.
வைகாசி விசாக திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி கடந்த 12-ம் தேதி நடந்தது. கோவில் மேல்சாந்திகள் பத்மநாபன், விட்டல், சீனிவாசன், நிதின் சங்கர், கண்ணன் மற்றும் கீழ் சாந்திகள் ராம் பிரகாஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் கால்நாட்டு வைபவத்தை நடத்தினர்.
இதேபோல் கன்னியாகுமரி கீழரத வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரிலும், கன்னியம்பலம் மண்டபத்திலும் கால்நாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.