ஆகஸ்ட் 3ம் தேதி வில்லியனூர் மாதா புனிதநீர் ஊற்றும் திருவிழா!

By செ.ஞானபிரகாஷ்

வில்லியனூர் மாதா திருக்குள நூற்றாண்டு விழா மற்றும் பிரான்ஸ் அற்புத சுனையிலிருந்து வரும் புனித நீர் ஊற்றும் விழா ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறவிருப்பதாக பங்குத்தந்தை ஆல்பர்ட் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்து அன்னை ஆலயம் 148 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தமிழர் பண்பாட்டின்படி ஆலயத்திற்கு முன்பாக குளம் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும். இயற்கையாக அமைந்துள்ள இந்த மாதா குளத்தின் கரைகள் 1924ம் ஆண்டு கட்டப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் பெர்னதெத் என்ற சிறுமிக்கு மாதா காட்சி கொடுத்த மசபியேல் என்ற குகையின் அற்புத சுனையில் இருந்து கொண்டு வரப்படும் புனித நீரானது வில்லியனூர் மாதா திருத்தல குளத்தில் ஆண்டுதோறும் கலக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த வில்லியனூர் மாதா திருக்குளத்தின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.

இது தொடர்பாக பங்குதந்தை ஆல்பர்ட் இன்று வெளியிட்ட அறிக்கையில், 'இந்த ஆண்டும் பிரான்ஸ் நாட்டின் லூர்து கெபியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புனித நீர் திருத்தல குளத்தில் கலக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமையன்று வில்லியனூர் மாதா திருத்தலத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அன்று காலை 6 மணிக்கு திருப்பலியும், அதனை தொடர்ந்து மாதா திருக்குளத்தை சுற்றி சிறிய தேர்பவனியும் நடைபெறுகிறது.

காலை 11.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்க இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அந்தோனிசாமி தலைமையில் அருள்நிறை ஆலயத்தில் நடைபெறும் சிறப்புக் கூட்டு திருப்பலிக்கு பின்னர், பிரான்ஸ் லூர்து கெபியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புனித நீர் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு வில்லியனூர் மாதா திருக்குளத்தில் ஊற்றும் சிறப்பு நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

இதன்பின்னர் லூர்து அன்னையின் சொரூபம் தாங்கிய தெப்பல் உற்சவம் மற்றும் நற்கருணை ஆசீருக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE