அம்மன் ஆலயங்களுக்கு சிறப்பு சுற்றுலா: தமிழக சுற்றுலா கழகம் சிறப்பு ஏற்பாடு!

By KU BUREAU

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் பக்தர்கள் அம்மன் கோவில்களுக்கு சிறப்பு சுற்றுலா சென்று வர ஏற்பாடு செய்து வருகிறது. காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த சுற்றுலாவில் வேன் மூலம் பக்தர்கள் அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, தரிசனம் முடித்து அன்றைய தினமே மாலை 7 மணிக்கு திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் பாரிமுனை காளிகாம்பாள் கோவில், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், பெரியபாளையம் பவானி அம்மன், புட்லூர் அங்காள பரமேஸ்வரி, திருமுல்லைவாயல் திருவுடையம்மன் மற்றும் பச்சையம்மன், கொரட்டூர் செய்யாத்தம்மன், வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். மதியம் கோவிலில் அன்னதானம் வழங்கப்படும். இந்த சுற்றுலா திட்டத்திற்கான கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில், முண்டககண்ணி அம்மன், கோல விழியம்மன் கோவில், தி.நகர் ஆலயம்மன், முப்பாத்தம்மன் கோவில், சைதாப்பேட்டை பிடாரி இளங்காளி அம்மன், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு தேவி கருமாரி அம்மன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் ஆகிய கோவில்களில் அம்மனை தரிசிக்கும் வகையில் மற்றொரு சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக ரூ.800 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE