கந்தசஷ்டி: இழந்ததை மீட்டுத் தருவார் வெற்றிவேலன்!

By காமதேனு

வழிபாடுகளில், கெளமாரம் எனப்படும் குமார வழிபாடு ஏராளமான பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடு, திருப்பரங்குன்றம். சூரபத்மனை வதம் செய்த சஷ்டியும் இங்கே பிரசித்தம். ஸ்ரீதெய்வானையைத் திருக்கரம் பற்றிய திருக்கல்யாண வைபவமும் இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

பல்லவ மன்னர் காலத்தில் கட்டப்பட்டு, திருமலை நாயக்க மன்னரின் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்ட அற்புதமான கோயில் இது என்கிறது ஸ்தல வரலாறு. தவிர, குடைவரைக் கோயில்களில் முக்கியமான ஆலயம் என்றும் போற்றப்படுகிறது.

இந்தத் தலத்தில் சிவபெருமான், திருமால், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதுர்கை முதலானோரின் சந்நிதிகளும் அமைந்திருக்கின்றன. இங்கே, லிங்க வடிவில் சிவபெருமானும் எதிரே மகாவிஷ்ணுவும் சந்நிதி கொண்டிருப்பதால், மால்விடை க்ஷேத்திரம் என்றும் பெருமையுடன் சிலாகிக்கிறார்கள் பக்தர்கள். மூலிகைகளால் செய்யப்பட்ட திருமேனியராக முருகப்பெருமான் திருக்காட்சி தருவதால், அவருக்கு அபிஷேகங்கள் இல்லை. வேலுக்கு மட்டுமே பாலபிஷேகம் நடைபெறுகிறது. வேலுக்குப் பாலபிஷேகம் செய்து பிரார்த்தித்தால், வேண்டிய வரங்களைத் தந்தருள்வான், கேட்டதையெல்லாம் தந்தருள்வான் வேலப்பன் என்பது ஐதீகம்!

காப்புக் கட்டுதலுடன் துவங்குகிறது கந்தசஷ்டி திருவிழா. யாகசாலை அமைக்கப்பட்டு, சிறப்பு ஹோமங்களும் நடைபெறும். ஸ்ரீதெய்வானையுடன் காட்சி தரும் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகங்கள் நடைபெறும்.

சஷ்டி விரதம் மேற்கொள்ளும் அன்பர்கள், இந்த நாளில் கையில் காப்பு கட்டிக்கொண்டு, விரதம் மேற்கொள்ளத் துவங்குவார்கள். மாலையில், சர்வ அலங்காரத்தில் ஸ்ரீசண்முகர் திருவீதியுலா வருவதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். 2-ம் நாள், 3-ம் நாள் என ஹோமங்கள், அபிஷேகங்கள், அலங்காரங்கள், பூஜைகள், நைவேத்தியங்கள் என இங்கே சஷ்டி விழா தினமும் அமர்க்களப்படும்.

5-ம் நாள், ஸ்ரீபார்வதிதேவியிடம் வேல் பெறும் வைபவம் அரங்கேறும். உமையவள் தந்த வேலுக்கு அபிஷேகங்களும் பூஜைகளும் நடந்தேறும். 6-ம் நாள் என்பது சஷ்டித் திருநாள். அன்றைய தினம், சூரசம்ஹார வைபவம் நடந்தேறும்.

கோயிலுக்கு அருகில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளும் முருகக்கடவுள், வேலுடன் திருவீதியுலா வருவார். ஸ்ரீசொக்கநாதர் கோயிலுக்கு முன்னே வந்து நிற்க... இரவு 7 மணிக்கு சூரனை வதம் செய்யும் படலம் அரங்கேறும்.

இதனைக் காண, லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். இன்னொரு சிறப்பும் திருப்பரங்குன்றத்தில் உண்டு. அது... திருக்கல்யாண வைபவம். சூரசம்ஹாரமும் திருக்கல்யாணமும் அடுத்தடுத்து நிகழ்வது, திருப்பரங்குன்றத்தில்தான் என்கிறார் சுப்ரமணிய குருக்கள்.

பிறகு, பூப்பல்லக்கில் திருவீதியுலா வரும் உற்சவரின் பேரழகு நம்மைச் சிலிர்க்கச் செய்யும். மறுநாள், சஷ்டி விரதமும் விழாவும் நிறைவுறும் விதமாக, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நூறு படி தயிர்சாதம் செய்து நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

சஷ்டி சமயத்தில் அறுபடை வீடு என்றில்லாமல், முருகக் கடவுள் கோயில் கொண்டிருக்கும் எந்த ஸ்தலத்துக்கும் சென்று, வேலவனைத் தரிசிக்கலாம். பிரார்த்தனை செய்துகொள்ளலாம். கல்யாண வரம் தருவார். எதிரிகளை காணாமல் போகச் செய்வார். இழந்ததையெல்லாம் மீட்டுத் தருவார் சஷ்டி நாயகன் வெற்றிவடிவேலவன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE