துக்கம் தீர்க்கும் துளசி வழிபாடு; ஐஸ்வர்யம் தருவாள் மகாலக்ஷ்மி

By காமதேனு

துளசி மாடத்துக்கு மஞ்சள் குங்குமமிட்டு, மலர்கள் சார்த்துங்கள். மகாலக்ஷ்மியின் படத்துக்கு குங்கும அர்ச்சனை செய்து மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். நம் இல்லத்தில் ஐஸ்வர்ய கடாக்ஷமும் மகாலக்ஷ்மி கடாக்ஷமும் நிறைந்திருக்கும்!

ஆடி மாதம் என்பதே புத்துணர்ச்சி தருகிற மாதம். அதாவது சக்தியையும் பலத்தையும் கொடுக்கும் மாதம். சித்திரை வெயிலுக்கும் ஐப்பசி மழைக்கும் நடுவே சிலுசிலுவென காற்று, நம் தலைமுடி கோதுகிற மாதம். ஆடிப்பட்டம் தேடி விதை என்றே சொல்லிவைத்தார்கள். இப்போது விதைத்தால், மழை வரும் போது விளைச்சலுக்கு வசதியாக இருக்கும் என்று கணக்குப் போட்டுச் சொன்னார்கள் முன்னோர்கள்.

அம்பாளை சக்தி என்கிறோம். சக்தியை வழிபட வழிபட நமக்கு தேகத்தில் ஆரோக்கியம் பெருகும். மனதில் பயமெல்லாம் விலகும். செய்யும் காரியங்களில் திடமும் தெளிவும் பிறக்கும். அதனால்தான் சாக்த வழிபாடு என்று சொல்லப்படுகிற சக்தி வழிபாடு அவ்வளவு எளிதல்ல என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஆடி மாதத்தில் அம்பாளை வழிபடுவதும் மாரியம்மன், காளியம்மன் முதலான உக்கிர தெய்வங்களை வழிபடுவதும் விசேஷம். அதேபோல், அம்பிகைக்கு உரிய வேப்பிலையை வீட்டு வாசலில் தோரணம் போல் கட்டிவைப்பதும் நோய்க்கிருமிகளில் இருந்தும் உஷ்ணத்தில் இருந்தும் நம்மைக் காத்தருளும் என்பது கிராமங்களில் இன்றைக்கும் வழக்கத்தில் இருக்கிறது. .

அம்பிகை வழிபாடு போலவே ஆடி மாதத்தில், மகாலக்ஷ்மித் தாயாரை வணங்குவதும் சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருளும். துளசியில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். எனவே, துளசியை வழிபடுவதும் வணங்குவதும் மிகப்பெரிய வெற்றிகளைக் குவிக்கும். தடைபட்டிருந்த மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தரும் என துளசி வழிபாட்டை சிலாகிக்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.

குறிப்பாக, ஆடி மாதத்தில் செய்யப்படும் துளசி வழிபாடு அரிதான பலன்களைத் தரும் என்கிறார்கள். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் (துவாதசி வரையில்) துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும். என்றாலும் ஆடி மாதம் முழுவதுமே துளசி மாடத்துக்கோ துளசிக்கோ பூஜைகள் செய்வது விசேஷத்துக்கு உரியது. சகல பலன்களையும் தந்தருளக்கூடியது. இல்லத்தில் அமைதியையும் ஆனந்தத்தையும் குடிகொள்ளச் செய்யும் என்பது ஐதீகம்.

ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் அதாவது வளர்பிறை ஏகாதசியில் கடைப்பிடிக்கப்படுவது, ஆடி கோபத்ம விரதம் எனப்படுகிறது. இந்த தினத்தில் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பசுவுக்கு அகத்திக்கீரை வழங்குவதும் பழங்கள் வழங்குவதும் பாவங்களையெல்லாம் போக்கும். துளசியை வழிபடுவது ரொம்பவே விசேஷம். பசுவிலும் துளசியிலும் வாசம் செய்யும் மகாலக்ஷ்மியை வணங்குவதற்குச் சமம் என்கிறார்கள்.

ஆடி மாதத்தில் எந்தக் கிழமையில் வேண்டுமானாலும் துளசி வழிபாட்டை, மகாலக்ஷ்மி வழிபாட்டைச் செய்யலாம். முக்கியமாக, ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமையிலும் பூஜித்து வழிபடலாம்.

அன்றைய தினம், வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுங்கள். மாவிலையிலும் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். வீட்டில் உள்ள பெருமாள் படங்களுக்கும் மகாலக்ஷ்மி படங்களுக்கும் வெண்மை நிற மலர்களையும் துளசியையும் சார்த்துங்கள். திருமகளுக்கு உரிய பாடல்களையும் ஸ்லோகங்களையும் பாராயணம் செய்யுங்கள். தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபடுங்கள். துளசி மாடத்துக்கு மஞ்சள் குங்குமமிட்டு, மலர்கள் சார்த்துங்கள். மகாலக்ஷ்மியின் படத்துக்கு குங்கும அர்ச்சனை செய்து மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். நம் இல்லத்தில் ஐஸ்வர்ய கடாக்ஷமும் மகாலக்ஷ்மி கடாக்ஷமும் நிறைந்திருக்கும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE