சித்திரைத் தேரோட்டத்தால் மதுரை குலுங்கியது!

By காமதேனு

மதுரையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 5-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவை முன்னிட்டு காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். கடந்த 12-ம் தேதி பட்டாபிஷேகமும், நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் இறுதி நிகழ்வான தேரோட்டம் இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரே வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் கொண்டு வரப்பட்டனர். இதற்கு முன்னதாக அங்குள்ள கருப்பண்ணசாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரிய தேர் புறப்பட்டு சென்றது. இத்தனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அதற்கு முன்னதாக சிறிய சப்பரங்களில் விநாயகர், நாயன்மார்கள் சென்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தாக்கம் காரணமாக பக்தர்களுக்கு நேரடி அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு விழா நடந்ததால் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் மதுரை நகரே விழா கோலம் பூண்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE