உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்

By காமதேனு

தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயிலின் தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரியகோயிலில் முக்கிய திருவிழாக்களில் சித்திரை திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா ஆண்டுதோறும் 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு தொற்று குறைந்து நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி இருக்கும் நிலையில் சித்திரை திருவிழா வெகு உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 30-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. 3 அடுக்குகள் கொண்டதும், 52 அடி உயரம் கொண்டதுமான இந்த தேர் 40 டன் எடை கொண்டது. தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலை பெரியகோயிலில் இருந்து ஸ்ரீதியாகராஜர், கமலாம்பாள் உற்சவர்கள் கொண்டு வரப்பட்டு இத்திருதேரில் எழுந்தருளினர். தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கிவைத்தார்.

மேலராஜவீதி, வடக்குராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு வீதி வழியாக மேலவீதியில் தேர் நிலையை அடையும். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேருக்கு முன் பெண்கள் கோலாட்டம், தப்பாட்டம் ஆடிச் சென்றனர். சிவ வாத்தியங்கள் முழங்கப்பட்டன.

பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களிலும் தன்னார்வலர்கள் தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்கள் அமைத்து இருந்தனர். அன்னதானமும் நடைபெற்றது. சதயவிழா குழு தலைவர் து.செல்வம், அரண்மனை மூத்த இளவரசர் பாபாஜி போன்ஸ்லே, திருவையாறு சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட பலரும் தெரோட்டத்தில் பங்கேற்றனர்.

படங்கள் ஆர்.வெங்கடேஷ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE