மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில், மற்றும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆகியவற்றில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தரிசனம் செய்தார்.
திருக்கடையூரில் உள்ள புராணப் பெருமை வாய்ந்த அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இம்மாதம் 27-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனகர்த்தர் அங்கு சென்று முகாமிட்டு தங்கி கவனித்து வருகிறார். குடமுழுக்கு விழாவிற்கான விக்னேஸ்வர பூஜை மற்றும் முதற்கால யாகசாலை பூஜைகள் இன்று மாலை தொடங்கின. அதில் கலந்துகொள்ளவும், சுவாமி வழிபாடு செய்யவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வந்திருந்தார்.
தருமபுரம் ஆதீனகர்த்தர் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய தமிழிசை சவுந்தரராஜன், மாலை 7.30 மணியளவில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை தந்தார்.
பொது தீட்சிதர்கள் சார்பில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்து வைக்கப்பட்டது. கோயிலிலிருந்து வெளியில் வரும்போது செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.