2004ல் திருடப்பட்ட சிலை: கபாலீஸ்வரர் குளத்தில் தேடும் போலீஸ்

By ரஜினி

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் காணாமல் போன தொன்மையான மயில் சிலையை தெப்பகுள்ளத்தில் தேடும்பணியில் தீயணைப்பு வீரர்கள், போலீஸார், அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2004-ம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்பு அங்குள்ள புன்னைவன நாதர் சன்னிதியில் இருந்த தொன்மைவாய்ந்த மயில் சிலைக்கு பதிலாக வேறொரு மயில் சிலை மாற்றி வைக்கப்பட்டதாகவும், உண்மையான சிலை திருடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சிலை மாயமான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிலைக் கடத்தல் தடுப்பு போலீசாரும் உண்மை கண்டறியும் குழுவையும் இணைத்து விசாரணை குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. 6 வார காலத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல அறநிலையத்துறை திருடுபோன மயில் சிலையை மீட்க முடியுமா? முடியாதா? என்பதை குறிப்பிட்டு மீட்க முடியாத பட்சத்தில் அதே அமைப்புடன் கூடிய வேறொரு சிலையை அந்த இடத்தில் வைக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஆகம விதிப்படி கோயில்களில் தொன்மைவாய்ந்த சிலைகளை தெப்பக்குளத்தில் மறைத்து வைக்கும் முறை இருப்பதால், திருடுபோன தொன்மைவாய்ந்த மயில் சிலையை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் தெப்பக் குளத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.

மேலும் உண்மையைக் கண்டறியும் குழுவுடன் இணைந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சில தினங்களுக்கு முன்பு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் தெப்பக் குளத்தில் சிலையை தேடும் பணியை மேற்கொள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் முடிவு செய்தனர்.

அதன்படி இன்று காலை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு உண்மை கண்டறியும் குழுவுடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்றனர். பின்னர் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல குழுக்களாக பிரித்து படகு மூலம் மைலாப்பூர் தெப்பக்குளத்தில் இறங்கி காணாமல்போன மயில் சிலையை தேடும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை வரை தேடுதல் பணி தொடரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE