குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா

By காமதேனு

திருச்சியின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் குட்டிக்குடி திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் விமரிசையாக நடைபெற்றது.

சோழ மன்னர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி மாநகர காவல் தெய்வமாக விளங்கும் குழுமாயி அம்மன் கோயிலின் வருடாந்திர தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதன் ஒருபகுதியாக குட்டிக்குடி திருவிழா நடைபெறும். குழுமாயி அம்மன் கோயிலில் இந்த ஆண்டுக்கான குட்டிக்குடி திருவிழா கடந்த பிப்ரவரி 26ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. புத்தூர் மந்தைக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை கொண்டு வந்தனர். மந்தைக்கு வந்த மருளாளியிடம் முதலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கிடா வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நங்கவரம் பண்ணை ஆடுகள் வழங்கப்பட்டது. அதன்பிறகு பொதுமக்களின் ஆடுகள் கொடுக்கப்பட்டது.

தேரோட்டம்

மருளாளி பக்தர்களின் ஆட்டின் இரத்தத்தை குடித்து அவர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இந்த விழாவிற்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE