சபரிமலையில் இளம்பெண்ணுடன் தரிசனம் செய்தாரா சிரஞ்சீவி?

By காமதேனு

சபரிமலை அய்யப்பன் கோயிலில் சாமி தரிசனத்துக்கு வந்த நடிகர் சிரஞ்சீவியுடன் இளம்பெண் ஒருவர் வந்ததாக தகவல் பரவியதையடுத்து, திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கடந்த 13ம் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அவருடன் அவரது மனைவி மற்றும் பீனிக்ஸ் குரூப் உரிமையாளர்களான சுக்கப்பள்ளி சுரேஷ், சுக்கப்பள்ளி கோபி அவர்களது மனைவிகளும் வந்திருந்தனர். இவர்களில் 50 வயதை எட்டாத மதுமதி என்பவரை சாமி தரிசனத்திற்கு அனுமதித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் அளித்துள்ள விளக்கத்தில், "மதுமதி என்பவர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது உண்மை. அவர் 1966-ம் ஆண்டு பிறந்தவர். சபரிமலை ஆசார முறைப்படி அவர் 50 வயதை கடந்தவர். அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை பரிசோதனை செய்த பின்னரே அவர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் தவறானது. தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE