கோயில் கோபுரத்தில் பறந்த தேசியக்கொடி!

By கரு.முத்து

நாட்டின் 75 வது சுதந்திரதினவிழா இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப் பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். அனைத்து மாநிலங்களிலும் முதல்வர்கள் கொடியேற்றினர். கோட்டைகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள். தனியார் அலுவலங்கள் என்று எங்கெங்கும் தேசியக்கொடி பட்டொளி வீசி பறக்கிறது. இவற்றுடன் வேறு எங்குமில்லாத கூடுதல் சிறப்பாக ஆன்மீக தலமான சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் கோபுரத்திலும் இன்று தேசியக்கொடி ஏற்றப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே சிதம்பரத்தில் மட்டும் தான் இப்படி சுதந்திர தினத்தில் கோயில் கோபுரத்தின் மீது தேசியக்கொடி கம்பீரத்துடன் ஏற்றப்படுகிறது.

அதன்படி இன்று காலை நமது தேசியக்கொடியை வெள்ளித்தட்டில் வைத்து எடுத்துவந்த தீட்சிதர்கள் அதனை நடராஜர் முன்பாக வைத்து பூஜை செய்தனர்.

பிறகு அந்தக் கொடியை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலின் கிழக்கு கோபுரத்தில் ஏற்றினார்கள். தீட்சிதர்களுடன் பக்தர்களும், பொதுமக்களும் கொடிக்கு மரியாதை செய்தார்கள். வேறெந்த வழிபாட்டுத் தலத்திலும் இல்லாத சிறப்பான இந்த சம்பவம் தேசப்பற்றுவுக்கு உதாரணமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE