ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு விழா: தமிழகம், வெளிமாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

By KU BUREAU

ராமநாதபுரம்: ஏர்வாடி தர்ஹாவில் நடந்த சந்தனக்கூடு திருவிழாவில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள ஏர்வாடி தர்ஹாவில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் 850-ம் ஆண்டு சந்தனக்கூடு சமூக நல்லிணக்க திருவிழா மவுலீது ஷரீப்புடன் (புகழ் மாலை) மே 9-ம் தேதி தொடங்கியது.

கடந்த மே 19-ம் தேதி கொடியேற்று விழா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான. சந்தனக்கூடு திருவிழாவையொட்டி நேற்று முன் தினம் யானை, குதிரை ஊர்வலத்துடன் தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. நேற்று அதிகாலை ஏர்வாடி முஜாவீர் நல்ல இபுராஹீம் தர்ஹாவில் இருந்து சந்தனக்கூடு எடுத்து, அலங்கார ரதத்துடன் ஊர்வலம் புறப்பட்டு அதிகாலை பாதுஷா நாயகம் தர்ஹாவை வந்தடைந்தது.

தர்ஹாவை 3 முறை சந்தனக்கூடு வலம் வந்த பின்னர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து, மக்பராவில் சந்தனம் பூசப்பட்டு, பச்சை மற்றும் பல வண்ணப் போர்வைகளால் போர்த்தப்பட்டு, மல்லிகை பூச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டது. இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மதுரை, கோவை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏர்வாடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தர்ஹா வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக, நேற்று முன்தினம் தர்ஹாவுக்கு சென்ற ஆட்சியர் பா. விஷ்ணு சந்திரன், கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் ஆகியோருக்கு தர்ஹா ஹக்தார்கள் கமிட்டி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரும் 7-ம் தேதி மாலை யில் நடைபெறும் கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE