மியான்மரை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 700ஐ தாண்டியது - தொடரும் மீட்பு பணி

By KU BUREAU

மியான்மரில் நேற்று (மார்ச் 28) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 694 ஆக அதிகரித்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 117 பேரை காணவில்லை. அதேபோல தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்

மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே நேற்று (மார்ச் 28) காலை 11.50 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடத்தில் அங்கு 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது. மியான்மரின் சாகாயிங் நகரின் வடமேற்கே 16 கி.மீ தொலைவிலும், 10 கி.மீ ஆழத்திலும் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 4 முறை லேசான அதிர்வுகள் ஏற்பட்டன.

இந்த நடுக்கங்களினால் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மியான்மரின் மண்டலே நகரில் உள்ள மசூதிகள், வீடுகள் இடிந்து விழுந்தன. இங்குள்ள பழமையான அரண்மனையும் இடிந்து விழுந்தது. இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 694 ஆக அதிகரித்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 117 பேரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள தாய்லாந்தில் அதிகம் இருந்தது. பாங்காங் நகரில் இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இந்த நகரிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாங்காங்கில் நிலநடுக்கத்தால் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்படுவதால் பலி எண்ணிக்கை 1000-ஐ கூட தாண்டலாம் என அச்சம் எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE