வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பினார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததும், ஆயுத உதவிகளை அமெரிக்கா நிறுத்தியது. இதையடுத்து, அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்த திட்டத்துக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த 11-ம் தேதி ஒப்புக் கொண்டார். இதையடுத்து ரஷ்ய அதிபர் புதினிடம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று இரவு போனில் பேசினார். இந்த பேச்சுவார்த்தை 2 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. போர் நிறுத்தம், கைப்பற்றியநிலப் பகுதிகளை பிரித்துக் கொள்வது, படைகளை வாபஸ் பெறுவது ஆகியவை தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேசினர்.