சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வருண் சக்ரவர்த்தி அச்சுறுத்தலாக இருப்பார்: நியூஸி. பயிற்சியாளர்

By KU BUREAU

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் புதிர் ஸ்பின்னரான வருண் சக்ரவர்த்தி அச்சுறுத்தலாக இருப்பார் என நியூஸிலாந்து அணியின் பயிற்சியாளரான கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் துபாயில் நாளை மோதுகின்றன. 25 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்க உள்ளன. இதனால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இறுதிப் போட்டியையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் நியூஸிலாந்து அணியின் பயிற்சியாளரான கேரி ஸ்டீட் கூறியதாவது: லீக் சுற்றில் எங்களுக்கு எதிராக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி 42 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதனால் அவர், இறுதிப் போட்டியிலும் எங்களுக்கு எதிராக களமிறங்குவார் என எதிர்பார்க்கிறோம். அவர், தரமான பந்து வீச்சாளர், கடந்த முறை எங்களுக்கு எதிராக தனது திறமைகளை வெளிப்படுத்தினார். அவர், விளையாட்டில் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார்.

எனவே அவரது பந்து வீச்சு திட்டங்களை எப்படி முறியடிப்பது, அவருக்கு எதிராக எப்படி ரன்களை குவிப்பது என்பது குறித்து நாங்கள் சிந்திப்போம். இந்த தொடரின் அட்டவணை என்பது எங்களது கைகளில் இல்லை. எனவே இதுகுறித்து நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை. இந்திய அணி தனது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாடுகிறது. ஆனால் நாங்கள் இங்கு ஒரு ஒரே ஆட்டத்தை மட்டுமே விளையாடினோம். அந்த அனுபவத்திலிருந்து மிக விரைவாக கற்றுக்கொள்வோம்.

தொடரின் தொடக்கத்தில் எட்டு அணிகள் இருந்தது. இப்போது இரண்டாகக் குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இருப்பது எப்போதும் உற்சாகமாக இருக்கிறது, எங்கள் கண்ணோட்டத்தில், இது இப்போது ஒரு ஆட்டத்திற்கு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தும் நிலையில் நாங்கள் இருந்தால் மகிழ்ச்சியடைவேன்,

நாங்கள் இப்போது போட்டியில் ஆழமாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன். சில நேரங்களில் உங்களுக்கு நிறைய பயிற்சி தேவையில்லை. இறுதிப் போட்டியில் போட்டியிட உங்கள் உடலையும் மனதையும் சரியாக வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த இரண்டு நாட்களில் கவனம் செலுத்துவோம்.இவ்வாறு கேரி ஸ்டீட் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE