விராட் கோலி சதம் விளாசல்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

By KU BUREAU

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபாயில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஜமானுக்கு பதிலாக இமாம் உல் ஹக் இடம் பெற்றார். இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிதானமாக ரன்கள் சேர்த்தது.

பாபர் அஸம் 26 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தை கவர் டிரைவ் விளையாட முயன்ற போது விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் பிடிகொடுத்து வெளியேறினார். ரன்கள் சேர்க்க தடுமாறிய மற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹக் 26 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் படேலின் அற்புதமான த்ரோவால் ரன் அவுட் ஆனார். 9.2 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 47 ரன்கள் என்ற நிலையில் சவுத் ஷகீலுடன் இணைந்த கேப்டன் முகமது ரிஸ்வான் நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.

3-வது விக்கெட்டுக்கு 144 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை அக்சர் படேல் பிரித்தார். முகமது ரிஸ்வான் 77 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் படேல் பந்தில் போல்டானார். இதன் பின்னர் இந்திய அணியின் மற்ற சுழற்பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் ரன்குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினர்.

தனது 4-வது அரை சதத்தை கடந்த சவுத் ஷகீல் 76 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய தயாப் தாஹிர் 4 ரன்னில் ரவீந்திர ஜடேஜா பந்தில் போல்டானார். சல்மான் அலி ஆகா 19 ரன்னிலும், ஷாகீன் ஷா அப்ரிடி ரன் ஏதும் எடுக்காமலும் குல்தீப் யாதவின் அடுத்தடுத்த பந்துகளில் நடையை கட்டினர். நசீம் ஷாவையும் 14 ரன்களில் வெளியேற்றினார் குல்தீப் யாதவ். ஹாரிஸ் ரவூப் 8 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

இறுதிக்கட்டத்தில் மட்டையை சுழற்றிய குஷ்தில் ஷா 39 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் எடுதத நிலையில் ஹர்ஷித் ராணா பந்தில் வெளியேற பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 242 ரன்கள் இலக்குடன் இந்திய அணி பேட் செய்தது. அதிரடியாக விளையாட முயன்ற கேப்டன் ரோஹித் சர்மா 15 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஷாகின் ஷா அப்ரிடி பந்தில் போல்டானார். இதையடுத்து விராட் கோலி, ஷுப்மன் கில்லுடன் இணைந்தார். ஷாகீன் ஷா அப்ரிடி வீசிய 7-வது ஓவரில் ஷுப்மன் கில் 3 பவுண்டரிகள் விளாசி அசத்தினார்.

ஷுப்மன் கில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரிஸ் ரவூப் பந்தில் கொடுத்த கேட்ச்சை குஷ்தில் ஷா கோட்டைவிட்டார். தொடர்நது ஹாரிஸ் ரவூப் விசிய 13-வது ஓவரில் விராட் கோலி 2 பவுண்டரிகள் விளாசினார். சீராக ரன்கள் சேர்த்த ஷுப்மன் கில் 52 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் அப்ரார் அகமது பந்தில் போல்டானார். 2-வது விக்கெட்டுக்கு விராட் கோலி, ஷுப்மன் கில் ஜோடி 69 ரன்கள் சேர்த்தது.

அப்போது அணியின் ஸ்கோர் 17.3 ஓவர்களில் 100 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர், விராட் கோலியுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை நோக்கி பயணித்தது. ஸ்ரேயஸ் ஐயர் 63 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் தனது 21-வது அரை சதத்தை கடந்தார். வெற்றிக்கு 28 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயர், குஷ்தில் ஷா பந்தில் இமாம் உல் ஹக்கின் சிறப்பான கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.

ஸ்ரேயஸ் ஐயர் 67 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்தார். 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி 114 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் ஷாகின் ஷா அப்ரிடி பந்தில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து அக்சர் படேல் களமிறங்கினார்.

அபாரமாக விளையாடிய விராட் கோலி 111 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவருக்கு 51-வது சதமாக அமைந்தது. அவரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்களும், அக்சர் படேல் 3 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இந்தத் தொடரில் இது 2-வது வெற்றியாக அமைந்தது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் 6விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியிருந்தது. இரு வெற்றிகளின் மூலம் 4 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி ‘பி‘ பிரிவில் முதல் அணியாக அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதேவேளையில் 2-வது தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வி கண்டிருந்தது.

158 கேட்ச்கள்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 2 கேட்ச்கள் செய்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச்கள் செய்திருந்த இந்திய வீரர்களில் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் சாதனையை முறியடித்தார். அசாரூதீன் 156 கேட்ச்கள் செய்திருந்தார். விராட் கோலி 158 கேட்ச்கள் எடுத்துள்ளார். இந்த வகை சாதனையில் இலங்கையின் ஜெயவர்தனே (218), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (160) முதல் இரு இடங்களில் உள்ளனர்.

விராட் கோலி 14 ஆயிரம் ரன்கள்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 15 ரன்களை எடுத்திருந்த போது சர்வதேச ஒருநாள் போட்டியில் 14 ஆயிரம் ரன்களை எட்டினார். 287 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல் சாதனையை அவர் எட்டி உள்ளார். இதன் மூலம் 14 ஆயிரம் ரன்களை விரைவாக சேர்த்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்ஸ்களில் 14 ஆயிரம் ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடித்து தற்போது புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார் விராட் கோலி.

மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். இந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் (18,426), குமார் சங்ககரா (14,234) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

விரைவாக 9 ஆயிரம்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா ஒரு ரன் எடுத்திருந்த போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விரைவாக 9 ஆயிரம் ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த மைல் கல் சாதனையை அவர், 181 இன்னிங்ஸில் எட்டி உள்ளார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 197 இன்னிங்ஸ்களில் 9 ஆயிரம் ரன்களை குவிந்திருந்ததே சாதனையாக இருந்தது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 2 கேட்ச்கள் செய்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச்கள் செய்திருந்த இந்திய வீரர்களில் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் சாதனையை முறியடித்தார். அசாரூதீன் 156 கேட்ச்கள் செய்திருந்தார். விராட் கோலி 158 கேட்ச்கள் எடுத்துள்ளார். இந்த வகை சாதனையில் இலங்கையின் ஜெயவர்தனே (218), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (160) முதல் இரு இடங்களில் உள்ளனர்.

ஓரே ஓவரில் 11 பந்து: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் ஓவரை வீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 11 பந்துகளை வீசினார். இதில் 5 அகலப்பந்துகள் (வைடு) அடங்கும். இதன் மூலம் ஒரே ஓவரில் அதிக பந்துகளை வீசிய ஜாகீர்கான், இர்பான் பதான் ஆகியோருடன் மோசமான சாதனையை பகிர்ந்து கொண்டார் முகமது ஷமி. ஜாகீர்கானும், பதானும் ஒரே ஓவரில் தலா 11 பந்துகளை வீசியிருந்தனர்.

மேலும் முகமது ஷமியின் ஓவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் மூன்றாவது நீண்ட ஓவராக அமைந்தது. அவர், 11 பந்துகளை வீசியிருந்தார். இந்த வகையில் வங்கதேசத்தின் ஹசிபுல் ஹொசைன், ஜிம்பாப்வேயின் டினாஷே பன்யங்கரா ஆகியோர் தலா 13 பந்துகளை ஒரே ஓவரில் வீசி முதலிடங்களில் உள்ளனர்.

இன்றைய ஆட்டம்: நியூஸிலாந்து - வங்கதேசம், இடம்: ராவல்பிண்டி, நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் 18

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE