மதுரையின் அடையாளமாக மாறும் ரயில் நிலையம்: மறு சீரமைப்பு பணியை ஆய்வு செய்த சு.வெங்கடேசன் எம்.பி நம்பிக்கை

By என்.சன்னாசி

மதுரை: மதுரையின் அடையாளமாக மாறும் ரயில் நிலையம் என மறு சீரமைப்புப் பணியை ஆய்வு செய்த சு.வெங்கடேசன் எம்பி நம்பிக்கை தெரிவித்தார்.

மதுரை ரயில் நிலையம் ரூ.300-க்கும் கோடிக்கு மேல் நவீன வசதிகளுடன் மறு சீரமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாக நடக்கிறது. இப்பணியை மக்கள் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆய்வு செய்தார். ரயில்வே அதிகாரிகள், கட்டுமான பிரிவு பொறியாளர்கள் உடன் சென்றனர்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "ரயில் நிலையங்கள் புதுப்பித்தலுக்கான முதல் பட்டியலில் மதுரை ரயில் நிலையம் இடம் பெறவில்லை. ரயில்வே அமைச்சர், நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய தால் 2வது பட்டியல் இடம் பெற்றது. புதுப்பித்தலுக்கென ரூ.347 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. திட்டமிட்டப்படி பணி நடக்கிறது. 2025 நவம்பரில் முடிந்து பயன்பாடுக்கு வரும்போது, இது மதுரையின் ஒரு அடையாளமாகமாறும். தற்போது தினமும் 40 ஆயிரம் பயணிகள் மட்டும் கையாளும் சூழலில், சீரமைப்புப் பிறகு சுமார் 1 லட்சம் பயணிகளை கையாளும் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

குளிரூட்டிய பயணிகள் அறைகள் 4 மடங்குமும், குளிரூட்டிய இல்லாத அறைகள் 30 மடங்கும் அதிகரிக்கும். இருசக்கர வாகனங்களுக்கான பாதுகாப்பு காப்பகம் 3 மடங்கும், 4 சக்கர வாகன காப்பகம் 8 மடங்கும் உயர்த்தப்படும். 6 எக்ஸ் லேட்டரில் இருந்து 32 ஆகவும், 34 ‘லிப்ட்’களும் அதிகரிக்கும். ஓய்வறைகளும் 4 மடங்கு உயரும். இது போன்ற நவீன வசதிகளுடன் பயன்பாடுக்கு வரும் மதுரை ரயில் நிலையமும், 24 மணி நேர சேவையை தொடங்கும் மதுரை விமான நிலையமும் மதுரையின் வளர்ச்சிக்கு உதவும்.

பெரும்பாலும் இரவு 8 முதல் 10 மணி வரை எல்லா ரயில்களும் இயக்கப்படும்போது, அந்நேரத்தில் பாதை மறித்து நடக்கும் கட்டுமானப் பணி தவிர்க்க வேண்டும். ரயில்வே நிர்வாக கட்டிடங்கள் குறைந்த வாடகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடங்கள் ரயில் நிலைய முன் பகுதியை மறைத்து, அழகை பாதிக்கிறது. ரூ.347 கோடியில் ரயில் நிலையம் நவீனப்படுத்தினாலும், 7 பிளாட் பாரங்கள் தான் இருக்கிறது. மதுரை கூடல்நகரை 2வது முனையமாக அறிவிக்க வேண்டும்.

இதன் கட்டுமானப் பணியை மாநில அரசு ஒருருங்கிணைக்க வேண்டும். சரக்கு ரயில்கள் போக்குவரத்து பைபாஸ் வழித்தடம் வேண்டும். மதுரைக்கான வசதிகளை பெறுவதில் முன் நின்று பெறுவோம். மதுரை ரயில் நிலைய தோற்றம் வெறு இடத்திற்கு எடுத்துச் செல்லும். இதற்காக ரயில்வே அமைச்சருக்கு நன்றி. ரயில்வே சொத்துகள் மக்களின் சொத்து. ரயில்வே மைதானம் மீட்கப்பட்டது போல் ரயில்வே தொடர் பான கட்டிடங்களை மீட்க வேண்டும்" என்று சு.வெங்கடேசன் கூறினார். இதைத்தொடர்ந்து மதுரை கீழ்மதுரை ரயில் நிலையத்தில் நடக்கும் பிளாட்பார பணியை எம்பி பார்வையிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE