கல் குவாரியில் தொடரும் உயிரிழப்புகள் - கோவையில் கண்டுகொள்ளப்படாத விதிமுறைகள்

By எஸ்.கோபு

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே வீரப்பகவுண்டனூரில், கோவை நரசீபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் வீரப்ப கவுண்டனூரை சேர்ந்த கிளி என்கிற துரை (50) என்பவர் 75 அடி ஆழத்தில் டிரில்லிங் பணி செய்து வந்தார்.

அவருடன் மேலும் 3 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாறையின் மேல் பகுதியில் நந்தகுமார் என்பவர் பொக்லைன் இயந்திரம் மூலம் கற்களை லாரியில் ஏற்றி கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக பாறை மேலிருந்து கல் தவறி குவாரிக்குள் வேலை செய்து கொண்டிருந்த துரையின் தலையில் விழுந்தது.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொழிஞ்சாம்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு துரையின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக, கல்குவாரி உரிமையாளர் ரவிக்குமார், பொக்லைன் இயந்திர ஓட்டுநர் தங்கராஜ், குவாரி மேலாளர் நந்தகுமார், மேற்பார்வையாளர் திலக் ஆகியோர் மீது கிணத்துக்கடவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாடு சுரங்க சான்றிதழ் பெற்ற தொழிலாளர் நல சங்கத்தினர் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் பெரும்பாலான குவாரிகளில் சுரங்க விதிமுறைகளை பின்பற்றாமல் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர் நலன் குறித்த கனிம வளத்துறையின் விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை. கல்குவாரியில் பணியாற்றும் மனித உயிர்களை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

கனிம வளச் சட்டப்படி குவாரியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தலைக்கவசம், ஷூ உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்க வேண்டும். ஆனால் யாரும் அதனை முறையாக கடைபிடிப்பதில்லை. அதேபோல் குவாரியின் உள்அமைப்பு படிக்கட்டுகள் போல் அடுக்கடுக்காக இருக்க வேண்டும்.

பெரும்பாலான குவாரிகளை கிணறு போன்ற வட்ட அமைப்பில் வெட்டுகின்றனர். இதனால் மேலே இயந்திரங்களை பயன்படுத்தி வேலை செய்யும் போது பாறை கற்கள் சரிந்து விழும்போது, குவாரியின் உள்ளே வேலை செய்பவர்கள் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது.

கடந்த ஆண்டு டி.நல்லிக்கவுண்டன் பாளையம் குவாரியில் இதே போன்று நடந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. ஆண்டுதோறும் குவாரியில் உயிரிழப்புகள் தொடர்கின்றன. ஒவ்வொரு குவாரிகளிலும் சுரங்க மேலாளர், போர்மேன், சுரங்க பணி மேற்பார்வையாளர் மற்றும் வெடி வைப்பவர் ஆகியோர் பணியமர்த்தப்பட வேண்டும்.

இதனால் வரும்முன் காப்போம் என்னும் அடிப்படையில் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும். குவாரி உரிமையாளர் உரிமம் பெற்றுள்ளபோது, அதனுடைய வரைபடத்தில் எப்படி உள்ளதோ அதே போன்றுதான் சுரங்க பணியை ஆரம்பிக்க வேண்டும்.

சுரங்க சட்டம் படித்தவர்களை பணிக்கு அமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரப்பகவுண்டனூர் கல் குவாரியில் நடந்த விபத்து குறித்து கனிம வளத்துறை உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி உயிரிழந்த தொழிலாளிக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE