ஏற்காடு கோடை விழா, மலர்க் கண்காட்சி: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

By KU BUREAU

சேலம்: ஏற்காட்டில் 47-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நாளை தொடங்கி 26-ம் தேதி வரை நடக்கிறது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நாளை (22-ம் தேதி) தொடங்குகிறது. மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விழாவை தொடங்கி வைக்கிறார். வரும் 26-ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. இதில் சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி, தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு இயற்கை வளங்கள் மூலம் மின்சாரம் உருவாக்குவதை எடுத்துரைக்கும் வகையில் பிரம்மாண்ட காற்றாலை, சுற்றுச்சூழலில் கடல் வாழ் உயிரினங்களின் பங்கினை உணர்த்தும் வகையில் பவளப்பறைகள், நண்டு, சிப்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற உருவங்களும், குழந்தைகளிடம் மரம் நடுதலை ஊக்குவிக்கும் வகையில் கார்ட்டூன் கதாப்பாத்திரங்களான டொனால்டு டக், மிக்கிமவுஸ், டாம் அண்டு ஜெர்ரி ஆகியன மரங்களை நடுவது போலவும், நீர் பாய்ச்சுதல் போலவும் காட்சிப்படுத்தப்படவுள்ளது. மேலும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

படகுப் போட்டி: சுற்றுலாத் துறையின் சார்பில் ஏற்காடு படகு இல்லத்தில் நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுமக்களுக்கான படகுப் போட்டி, சமூக நலத்துறையின் சார்பில் 23-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை அடுப்பில்லா சமையல் போட்டி, விளையாட்டுத் துறையின் சார்பில் கால்பந்து போட்டி, பெண்களுக்கான பந்து வீசுதல் போட்டி, 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நின்று நிலை தாண்டுதல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 25-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நாய்கள் கண்காட்சியும், சமூக நலத்துறை சார்பில் 26-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை குழந்தைகளின் தளிர் நடை போட்டியும் நடத்தப்படவுள்ளது. சுற்றுலாத் துறை மற்றும் கலைப் பண்பாட்டுத் துறையின் சார்பில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கொம்பு இசை, சிலம்பாட்டம், பறை இசை, மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பரத நாட்டிய நிகழ்ச்சி, நாட்டுப் புற பாடல்கள், கரகாட்டம், பப்பட் ஷோ, கிராமிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. கோடை விழாவையொட்டி சேலத்திலிருந்து ஏற்காட்டுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மலையேற்றம்: ஏற்காடு கோடை விழா தொடங்கும் 22-ம் தேதி காலை 6.30 மணிக்கு மலையேற்றம் நடைபெறுகிறது. இதில் 15 வயது முதல் 45 வயதுள்ளவர்கள் 99658-34650 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE