மதுரையில் சிறைவாசிகள் தயாரித்த பொருட்கள் சிறப்பு விற்பனை!

By என்.சன்னாசி

மதுரை: ஆடிப்பெருக்கையொட்டி, மதுரை மத்திய சிறைவாசிகள் தயாரிக்கும் பல்வேறு பொருட்களை சிறை சந்தை மூலம் மக்கள் வாங்கும் விதமாக சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்தும் விதமாக பல்வேறு வகை தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு பயிற்சி பெற்ற சிறைவாசிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தமிழகம் முழுவதும் சிறை சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மதுரை மத்திய சிறை சந்தையில் சிறைவாசிகள் தயாரிக்கும் இனிப்பு, கார வகைகள் மட்டுமின்றி கட்டில், டைனிங் டேபிள், பீரோ, மர அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட பொருட்கள், இரும்பு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அலங்காநல்லூர் பெரிய குலசை கிராமத்தைச் சேர்ந்த தமிழினியனுக்கு கதவுகள், மர ஜன்னல் ஆகியவற்றை சிறை வாசிகள் தயாரித்து விற்பனை செய்தனர்.

மரப் பொருட்கள் விற்பனையை மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி, சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் தொடங்கி வத்தனர். இந்நிலையில், ஆடிப் பெருக்கையொட்டி தற்போது மரப் பொருட்கள் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.

இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியது: மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாள் அறிவுரையின் பேரில் மர வேலைப்பாடு மற்றும் இரும்பு வேலைப்பாடு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் விருப்பம், தேவைக்கேற்ப பொருட்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

சமீபத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த தம்பதி தங்களது மகளின் திருமணத்துக்கு தேவையான சீர்வரிசைப் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்தனர். வரும் செப்டம்பரில் தேனி, மதுரையில் நடக்கும் 2 திருமணங்களுக்கான சீர்வரிசைப் பொருட்களை ஆர்டர் அளித்துள்ளனர். சிறைவாசிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு மக்கள் வரவேற்பு அளித்து ஊக்கமளிக்க வேண்டும் என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE