பிள்ளைகளுக்கு நண்பர்களைத் தேட தோள் கொடுப்போம்!

By காமதேனு

பெற்றோருக்கு அடுத்தபடியாக பிள்ளைகளுக்குத் தேவை நல்ல நண்பர்கள். ஒரு குழந்தைக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தால், அந்தக் குழந்தையின் வளர்ச்சி மிக வேகமாகவும் சீராகவும் இருக்கும். தன் பெற்றோரிடம் சொல்லத் தயங்கும் விஷயத்தைக்கூட நண்பர்களுடன் பகிர்ந்துகொள்பவர்கள் என்ப தால் குழந்தைகளுக்கு நல்ல நண்பர்கள் அமைவது மிகவும் அவசியம்.

அரசுப் பணிகளில் இருப்போரில் பலர் பணி நிமித்தமாக அடிக்கடி பல்வேறு ஊர்களுக்கு மாறுதல் ஆவதுண்டு. அதுபோன்ற சந்தர்ப்பங்களில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். தம்மோடு பழகிய நண்பர்களை விட்டுப் பிரியும் குழந்தைகள், புதிய சூழலில் நல்ல நட்பு கிடைக்காமல் திணறிப் போவார்கள். இதனால் ஏற்படும் தனிமைச் சூழல் அவர்களை சோர்வடைய வைத்துவிடும். சில சமயங்களில் குழந்தைகளை நாம் புதிதாக வேறு பள்ளிக்கு மாற்றினாலும், வீட்டை மாற்றினாலும் இதேபோன்ற சிக்கல் அவர்களுக்கு ஏற்படுவதுண்டு. இந்தச் சூழல் குழந்தைகளுக்கு ஏற்படாமல், அவர்களுக்கு நல்ல நண்பர்கள் துணையாகக் கிடைக்க உதவ வேண்டியது பெற்றோரின் பொறுப்பாகும்.

கலகலப்பான சுற்றத்தை அமைத்துக் கொடுங்கள்

உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்கள் கிடைக்க வேண்டுமானால், முதலில் நீங்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கக் கூடாது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கலகலப்பாக பழகும் நபராக இருக்க வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளுக்கும் கலகலப்பான நல்ல சுற்றம் கிடைக்கும். அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள குழந்தைகளுடன் அவர்களுக்கு நட்பு கிடைக்கும். அந்த நட்பு மேலும் வலுப்பெற, அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்களுக்குள் ஏதாவது சண்டை வந்தால் அதை அவர்களாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அப்படிச் செய்வதால் அவர்களாகவே சமாதானமாகி விடுவர்கள். சிறு சிறு சண்டைகளால் ஏற்படும் ஊடல்களுக்குப் பிறகு மீண்டும் சேர்வது அவர்களின் நட்பை மேலும் இறுக்கமாக்கும். மாறாக அவர்களின் சண்டையை பெற்றோர்களுக்கு இடையிலான சண்டையாக நீங்கள் மாற்றினால் வீண் மனக்கசப்புகள்தான் ஏற்படும். குழந்தைகளுக்கும் நீங்கள் தவறான முன்னுதாரணமாக மாறி விடுவீர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE