அது ஒண்ணுமில்லைங்க சார்... அழுக்குத் தண்ணி..!- படம்காட்டிப் பதுங்கிய (டி)ராமர் பிள்ளை

By காமதேனு

சிபிஐ விசாரணை வரைக்கும் சென்று வந்த ராமர் பிள்ளை மீண்டும் செய்திகளில்... கோடம்பாக்கத்தில் வசிக்கும் அவரைச் சந்திக்கப் போனேன். “டீ சாப்பிடலாம்” என்று அழைத்துச் சென்று டீ வாங்கித் தந்தவர், “அண்ணே அக்கவுன்ட்டுல வெச்சுக்குங்க” என்று சொல்லிவிட்டு “இந்தப் பாலில் இருந்தும் என்னால பெட்ரோல் தயாரிக்க முடியும்...” என்று சொல்ல டீ மாஸ்டர் அவசரமாகப் பால் குண்டானை மூடிவைத்து முறைக்கிறார். அக்கம்பக்கம் இவரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை போலிருக்கிறது. சாதாரணமாக ‘டீல்’ செய்கிறார்கள். ஒருகாலத்தில் எப்படி இருந்தவர் தெரியுமா ராமர் பிள்ளை?

வில்லிப்புத்தூர் அருகேயுள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்த ராமர்பிள்ளை மூலிகை பெட்ரோல் மூலம் அகில உலக ஃபேமஸ்(!) ஆனவர். 1996-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி. அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தனது மூலிகை பெட்ரோலை ‘டெமோ’ காட்டினார் ராமர் பிள்ளை. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றியவர் அதில் மூலிகை திரவம் என்று சொல்லி ஆறு சொட்டுகளை விட்டார். கூடவே, அதில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றைப் பிழிந்து கலக்கினார். கருணாநிதியே வியப்புடன் பார்க்க, அமைச்சர் ஆற்காடு வீராசாமி அதிலிருந்து சில சொட்டுகளை ஒரு காகிதத்தின் மீது ஊற்றி, பற்றவைக்க குப்பென்று பற்றி எரிந்தது காகிதம். பகுத்தறிவாளரும் அறிவியலை நம்புபவருமான கருணாநிதியையே கண்ணைக் கட்டிய தருணங்கள் அவை!

ஆனால், இவரது மூலிகை பெட்ரோலை சோதித்த மத்திய அரசின் ஐ.ஐ.டி. அது போலி என்றது. சிபிஐ வழக்கு சிறைக்கு அனுப்பியது. அத்தோடு முடங்கிப்போனார். மக்களும் மறந்துபோனார்கள். 22 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் வெளியே தலைகாட்டியிருக்கிறார் ராமர்பிள்ளை. இம்முறை, நான்கு ரூபாய்க்கு பெட்ரோல், ஐந்து ரூபாய்க்கு டீசல் என்று இவர் பிரகடனம் செய்ததைப் பார்த்து உளவுத்துறையே ஆடிபோனது.

“நிச்சயம் உங்களுக்குத் தரேன். சுதந்திர தினத்தன்னிக்கு பேரலோட வந்துடுங்க... கூட்டம் நிறைய இருக்கும். நான் வந்து ஃபேக்டரிக்குள்ள கூட்டிட்டுப் போயிடறேன்...” என்றார் அவர். பிரமிப்பாக பார்த்துக்கொண்டிருக்கும்போதே நிறைய பேசினார்... இல்லை, குழப்பினார். எதற்கெடுத்தாலும் ராணுவத்தை துணைக்கு அழைத்தார். பிரதமர் வரை பெயர்களை உச்சரித்தார்! அவர் சொல்லும் தகவல்கள் அத்தனையும் சிஐஏ, மொசாத், ரா, ஐபி, சிபிஐ, சிபிசிஐடி ரகங்கள்... அதை எல்லாம் எழுதினால் எனக்கு பெயில் இல்லாத ஜெயில் நிச்சயம் என்பதால் தவிர்த்துவிடுகிறேன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE