தாகத்துக்காக மென்பானம் குடிப்பவரா நீங்கள்? - ஹெல்த் அலர்ட் குறிப்புகள்

By ப்ரியன்

கோடையில் தாகம் தணிக்க சிலர் அவ்வப்போது மென்பானம் (Soft drings) குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பர். இதன் விளைவுகள் குறித்து பொதுநல மருத்துவர் பகிர்ந்த அலர்ட் குறிப்புகள் இவை...

“குளிர்பானம் என்பது அதிக அளவில் ‘ஃபிரக்டோஸ்’ எனும் சர்க்கரையும் கார்பன்-டை-ஆக்சைடும் கலக்கப்பட்ட ஒரு பானம். இதில் எவ்வித ஊட்டச்சத்தும் இல்லை. இவற்றைக் குடிப்பதால் ஆற்றலும் கிடைப்பதில்லை. குறிப்பாக, தாகம் தணிவதும் இல்லை.

குளிர்பானங்களின் சுவையை மேம்படுத்துவதற்காக, காஃபீன் சேர்ப்பர். இனிப்பை நிலைப்படுத்த சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவற்றைக் கலப்பர். வண்ணமூட்டுவதற்காக கேராமல் பீட்டா கரோட்டினைப் பயன்படுத்துவர். இவை தவிர அஸ்பர்டேம் போன்ற செயற்கைச் சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டிகள், பதப்படுத்தும் வேதிப் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. இவை நம் உடல் உறுப்புகளுக்கு ஆபத்தைத் தரக்கூடும்.

குளிர்பானங்களைப் பெரும்பாலும் அதிக குளிர்ச்சியான நிலையிலேயே குடிக்கிறோம். இதனால், உடலைக் குளிர்ச்சியடையச் செய்து, தாகத்தைத் தணிக்கும் என்று நம்புகிறோம். இது முற்றிலும் தவறு.

உண்மையில் குளிர்பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, அதன் குளிர்ச்சியானது நமது ரத்தநாளங்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும். இதன் விளைவால் தாகம் கூடுமே தவிர குறையாது. மீண்டும் மீண்டும் குளிர்ந்த மென்பானங்களைக் குடிக்கத் தூண்டுகிறது என்பதை உணருங்கள்.

மென்பானங்களில் உள்ள ‘ஃபிரக்டோஸ் கார்ன் சிரப்’ எனும் சர்க்கரை ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பாய்கிறது. 250 மி.லி. மென்பானத்தில் 10 தேக்கரண்டி அளவுக்குச் சர்க்கரை உள்ளது. இதனால் ரத்தச் சர்க்கரை பல மடங்கு அதிகரிக்கிறது. இதைக் கட்டுப்படுத்தக் கணையத்தில் இருந்து இன்சுலின் அதிக அளவில் சுரக்கிறது.

மென்பானங்களை அளவில்லாமல் குடிப்போருக்கு இப்படி இன்சுலினும் அடிக்கடி அதிகமாகச் சுரப்பதால், இளம் வயதிலேயே கணையம் களைத்துவிடுகிறது. இதன் விளைவால் இன்சுலின் சுரப்பு குறைந்து, இளமையிலேயே சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. ‘டைப் 2’ சர்க்கரை நோய் இளைஞர்களுக்கு அதிகமாகி வருவதற்கு மென்பானம் குடிப்பது முக்கியக் காரணம் என்கிறது ஆய்வு.

தினமும் மென்பானம் குடிக்கும் குழந்தைகளில் 60% பேர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். குளிர்பானம் குடிக்கும்போது ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இந்தச் சர்க்கரை கல்லீரலில் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. இப்படிப் படிப்படியாகச் சேமிக்கப்படும் கொழுப்பு உடல் பருமனை உண்டாக்குகிறது. இந்த உடல் பருமன் இளம் பருவத்திலேயே இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய் என்று பல்வேறு பிரச்னைகளுக்கு அடித்தளம் அமைத்து விடுகிறது.

குளிர்பானத்தில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் பல்லின் மேற்பூச்சாக இருக்கிற எனாமலை மிக விரைவாக அரித்துவிடுவதால் பற்சிதைவும் உண்டாகிறது. பற்களின் ஆயுள் குறைகிறது. எனவே, சீக்கிரமே பற்கள் விழுந்துவிடுகின்றன. சிறுநீரகத்தில் கற்கள் உருவாகவும் மென்பானம் ஒரு காரணமாகிறது.

மென்பானங்களைத் தொடர்ந்து அருந்தும்போது, இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்து இரைப்பைப் புண், குடற்புண் போன்றவை ஏற்படலாம். பசியின்மை, புளித்த ஏப்பம், எதிர்க்களித்தல், வயிற்று வலி போன்ற தொல்லைகள் நீடித்து, நாளடைவில் செரிமானக் கோளாறுகளுக்கு வழிவகுத்துவிடும் ஆபத்தும் உண்டு.

கோடைக் காலத்தில் தினமும் மூன்றிலில் இருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், நீர்மோர், சர்பத், பானகம், பதநீர் போன்றவை தாகம் தணிக்க உதவும். எலுமிச்சை சாற்றுடன் சமையல் உப்பு, சர்க்கரை கலந்து அருந்துவது குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பெற உதவும்” என்கிறார் பொதுநல மருத்துவர் கு.கணேசன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE