இந்திய மசாலாக்களின் ஏற்றுமதி 40% அடிவாங்கும் அபாயம்: நடவடிக்கை எடுக்குமா அரசு?

By எஸ்.சுமன்

புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்ஸைடு வேதிப்பொருள், இந்தியாவில் தயாரான மசாலாப் பொருட்களில் அதிகம் இருப்பதாக கணித்திருக்கும் உலக நாடுகளால், இந்திய மசாலாக்களின் ஏற்றுமதி பெரியளவில் அடிவாங்கும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்றுமதிக்கான மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு மாசுபாடு பிரச்சினை விரைவில் தீர்க்கப்படாவிட்டால், நடப்பு நிதியாண்டில் இந்திய மசாலா ஏற்றுமதி கிட்டத்தட்ட 40 சதவீதம் குறையும் என்று இந்திய மசாலா பங்குதாரர்களின் கூட்டமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்தியாவின் பிரபல பிராண்டுகளான எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன எத்திலீன் ஆக்சைடு இருப்பதைக் கண்டறிந்த பின்னர், அவற்றுக்கு அங்கே தடைவிதிக்கப்பட்டது. இந்த பின்னணியில் இந்திய மசாலா பங்குதாரர்களின் கூட்டமைப்பு இந்த கவலையை வெளியிட்டுள்ளது.

எவரெஸ்ட் மீன் கறி மசாலா

2023-24ம் நிதியாண்டில், இந்தியாவின் மசாலா ஏற்றுமதி 4.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது உலகளாவிய மசாலா ஏற்றுமதியில் 12 சதவீத பங்கைக் கொண்டது. "ஏராளமான ஏற்றுமதியாளர்கள் தங்கள் கைகளில் ஆர்டர்களை கொண்டுள்ளனர். ஆனால் எத்திலீன் ஆக்ஸைடு விவகாரத்தால் அவை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சிக்கலை விரைவாக தீர்க்காவிட்டால், நடப்பு நிதியாண்டியில் இந்திய மசாலா ஏற்றுமதி வர்த்தகம் 40 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்படும்" என்று இந்திய மசாலா பங்குதாரர்களின் கூட்டமைப்பின் செயலாளர் தேஜாஸ் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இந்திய மசாலா பங்குதாரர் கூட்டமைப்பின் தலைவர் அஷ்வின் நாயக், ’எத்திலீன் ஆக்ஸைடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், இது உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும்’ கூறினார். "எத்திலீன் ஆக்ஸைடு என்பது நேரடியாக பயிர்களில் தெளிக்கப்படும் ஒரு பூச்சிக்கொல்லி அல்ல. தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரியல் மற்றும் பாக்டீரியா கூறுகளை அகற்ற அல்லது கட்டுப்படுத்த அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் மட்டுமே பயன்படுத்தப்படும் வாயு ஆகும். இது உலகின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் நுட்பமும் கூட" என்றார்.

எம்டிஹெச் மசாலா

"இந்தியாவின் மசாலா ஏற்றுமதியின் நடப்பு மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். எத்திலீன் ஆக்ஸைடு பற்றி சில கட்டுக்கதைகள் பரப்பப்படுவதால் ஏற்றுமதி நிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும், “எத்திலீன் ஆக்ஸைடு 10 டிகிரி சென்டிகிரேடில் ஆவியாகி விடுவதால், அது மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எத்திலீன் ஆக்ஸைடு மருத்துவ உபகரணங்களின் பாதுகாப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. எத்திலீன் ஆக்ஸைடு பிரச்சினை என்பது ஊடகங்களில் முன்னிறுத்தப்படுவது போன்று அத்தனை தீவிரமானது அல்ல” என்றும் அவர் விளக்கம் தந்தார்.

இதையும் வாசிக்கலாமே...

சவுக்கு சங்கர் வழக்கு... பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்!

ஓடுபாதையில் விமானம் மீது மோதிய டிரக்; உயிர் தப்பிய 180 பயணிகள்; புனேவில் பரபரப்பு!

கையில் கட்டுடன், கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்!

பெரும்பான்மை கிடைக்கலைன்னா பாஜகவின் ‘பிளான் பி’ என்ன? - அமித் ஷா அட்டகாச பதில்!

அஞ்சலி கொலையில் திடீர் திருப்பம்... ஓடும் ரயிலிலிருந்து குதித்த குற்றவாளி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE