நினா சிங்... சிஐஎஸ்எஃப் படையின் முதல் பெண் தலைவரானார்

By காமதேனு

விமான நிலையங்கள் உட்பட நாட்டின் முக்கிய நிலையங்களின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றிருக்கும், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் தலைவராக முதல்முறையாக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அத்துமீறல் சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, அங்கு மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் பாதுகாப்புக்கு உள்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. அதே வேகத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் தலைவராக நினா சிங் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

பீகாரைச் சேர்ந்தவர் நினா சிங். பாட்னா மகளிர் கல்லூரியைத் தொடர்ந்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தவர். தொடர்ந்து ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

சிஐஎஸ்எஃப்

ராஜஸ்தான் கேடர் அதிகாரியாக பணியை தொடங்கியவர், அந்த மாநிலத்தின் டிஜிபி பதவியில் அமர்ந்த முதல் பெண் என்ற பெருமைக்கு ஆளானவர். 2000-வது ஆண்டில் மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் செயலராக இருந்தபோது, துயருக்கு ஆளாகும் பெண்களை தேடிச்சென்று உதவும் முன்னோடித் திட்டத்தை கொண்டு வந்தார்.

2013-2018 ஆண்டுகளில் சிபிஐ-யின் இணை இயக்குநராக இருந்தபோது, ​​ஷீனா போரா கொலை வழக்கு மற்றும் ஜியா கான் தற்கொலை வழக்கு போன்ற உயர்மட்ட வழக்குகளை மேற்பார்வையிட்டார். 2020-ம் ஆண்டில், தொழில்முறை சிறப்பிற்காக அவருக்கு அதி உத்கிரிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.

இவரது கணவர் ரோஹித் குமார் சிங் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தற்போது மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் செயலாளராக அவர் பணியாற்றி வருகிறார்.

விமான நிலையத்தின் பாதுகாப்பு பணியில் சிஐஎஸ்எஃப்

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டுப்லோ ஆகியோருடன் இணைந்து 2 ஆய்வுக் கட்டுரைகளை நினா சிங் எழுதியுள்ளார். 2005-2006-ல் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்திற்காக, காவல் நிலையங்களை பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றும் திட்டத்திலும் நினா சிங் பணியாற்றினார்.

தற்போது சிஐஎஸ்எஃப் படையின் டைரக்டர் ஜெனரலாக பொறுப்பேற்ற முதல் பெண் என்ற பெருமைக்கு ஆளாகி இருக்கிறார். டெல்லி மெட்ரோ மற்றும் நாடு முழுவதும் உள்ள சிவில் விமான நிலையங்கள், விண்வெளி மற்றும் அணுசக்தி நிலையங்கள், இதர முக்கிய தொழில் மையங்கள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு பணிக்காக சுமார் 1.76 லட்சம் பேர் கொண்ட வலுவான மத்திய ஆயுதம் தாங்கிய வீரர்களுடன் சிஐஎஸ்எஃப் கட்டமைக்கப்பட்டுள்ளது.

2021 முதல் சிஐஎஸ்எஃப்-ல் பணியாற்றி வரும் நினா சிங், தற்போதைய உயர்பதவியில், அவர் ஓய்வு பெறவிருக்கும் 2024, ஜூலை 31 வரை பணியாற்றுவார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE