திடீர் மழை! அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் பயிர்கள் சாய்ந்து நாசம்

By காமதேனு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விளைந்து தயாராக இருந்த 500 ஏக்கர் குறுவை பயிர்கள் திடீரென பெய்த மழையில் தரையோடு தரையாக சாய்ந்து விவசாயிகளை வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி குறிப்பிட்ட நாளில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் அதிக பரப்பளவில் கோவை சாகுபடி நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தன. மேட்டூருக்கு நீர்வரத்து குறைந்து போனதால் மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைந்தது.

இந்த நிலையில் போதிய தண்ணீர் இல்லாததால் பல்வேறு இடங்களில் குறுவை பயிர்கள் கருகியது. மேலும் கால்நடைகளை கொண்டு மேய்த்தும், டிராக்டர் ஓட்டியும் பயிர்களை அழித்தனர். இதனால் சுமார் 35 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. எஞ்சிய பயிர்களை எஞ்சின் மூலம் தண்ணீர் இறைத்து காப்பாற்றினர்.

பயிர்கள்

அதன் விளைவாக அந்த பயிர்கள் கதிர் வந்து, அவை முற்றி இன்னும் 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வெண்மணி, கடலாகுடி, திருபஞ்சனம், பிச்சமங்கம், அணக்குடி, கிள்ளுக்குடி அய்யடிமங்கலம், காரிய மங்கலம், மோகலூர் , செண்பகபுரம், பரப்பனூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கரில் இன்னும் 10, தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தன.

இந்த நெற்பயிர்கள் நேற்று முன்தினம் இடியுடன் பெய்த கனமழை காரணமாக அடியோடு வயலில் சாய்ந்துள்ளது.
மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடை எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் கடன் வாங்கி சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் திடீரென பெய்த கனமழையால் சேதமடைந்தது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

எனவே தமிழக அரசு உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE