புதுச்சேரியில் கொரோனா பாதித்து சிகிச்சையிலிருந்த கூலித் தொழிலாளி ஒருவர் இன்று உயிரிழந்தார். அவரது சடலத்தை அடக்கம் செய்ய தாமதமானதால் ஆட்சியரை எம்.எல்.ஏ உள்ளிட்டவர்கல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி உருளையன்பேட்டைத் தொகுதி நேருநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (55). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 19-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு ரத்தப் பரிசோதனை நடத்தியதில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதையடுத்து சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று உயிரிழந்தார்.
உயிரிழந்த கோவிந்தனின் சடலத்தை அடக்கம் செய்ய புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தியுள்ளனர். தகவல் அறிந்த ரங்கசாமி ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.வான நேரு மருத்துவமனைக்கு வந்தார். அவர் ஆட்சியர், சுகாதாரத் துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்புகொண்டும் யாரும் பேசவில்லையாம்.
இந்தநிலையில், அலுவலகத்துக்கு காரில் வந்த ஆட்சியர் வல்லவனை நேரு எம்.எல்.ஏ மற்றும் கோவிந்தன் குடும்பத்தார் மறித்தனர். அவரது காரைச் சுற்றிலும் அவர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே ஆட்சியர், சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலுவைத் தொடர்பு கொண்டு கரோனாவால் உயிரிழந்த கோவிந்தன் உடலை அடக்கம் செய்ய ஆம்புலன்ஸ் வரவழைத்தார். அதையடுத்து எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் போராட்டத்தைக் கைவிட்டனர்.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு பற்றி சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலுவிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 6 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் யாரும் சிகிச்சையில் இல்லை. டெங்கு பாதித்த 12 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 18 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி இருப்பதை அடுத்து, தினமும் 500 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
இமானுக்குப் பதில் சொன்ன சிவகார்த்திகேயன்... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!
அதிர்ச்சி... விஜய் நடிக்கும் 'தளபதி 68’ பட பிரபலம் மரணம்!
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பு: காவல் துறை அதிரடி அறிவிப்பு!