கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே வீரவநல்லூர் கிராமத்தில் உள்ள பழமையான சிவபாண்டி ஆண்டார் கல்மடத்தில் உள்ள கல்வெட்டுகள் அந்த மடத்தின் பழமையையும், அதற்கு தானம் செய்தவர்களின் பெயர்களையும் இன்றைக்கும் விளக்கமாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் தாமரைப்பாண்டியன் சில நாட்களுக்கு முன் வீரவநல்லூரில் உள்ள ஆண்டார் கல் மடம் என்று அழைக்கப்படும் பழமையான மடத்திற்கு சென்று அங்குள்ள இரண்டு கல்வெட்டுகளை ஆய்வு செய்தார். அந்தக் கல்வெட்டுகளின் வாயிலாக அந்த ஊரின் பழைய பெயர், இந்த மடத்தின் செயல்கள், மடத்திற்கு தானம் செய்தவர்கள் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.
வீரவநல்லூரின் பழைய பெயர் வீர கேரளநல்லூர். பிற்காலப் பாண்டிய மன்னர் கி.பி.1641-ம் ஆண்டு வீரகேரள நல்லூர் கல்மடத்தை அமைத்து பட்டயம் மூலம் தானமும் செய்துள்ளார். இவர் வரகுணராம பாண்டியனாக இருக்கலாம். அல்லது அவரது காலத்துக்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னனாக இருக்கலாம்.
இங்குள்ள இரண்டு கல்வெட்டுக்களில் செப்புப் பட்டய வடிவ கல்வெட்டு 1678-ம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. பாண்டிய மன்னனும் இராமனாச்சியாரும் கணக்கன் பராக்கிரம பாண்டியப் பெருமாளும் வழங்கிய தானம் பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பனைவிளை, நரசிங்கன் தோப்பு, தோப்பறில் மேத்தியா பிள்ளை நிலத்திலிருந்து வந்த கடமைப் பணத்தையும் தானமாக வழங்கியதாகவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
அடுத்து, இராமனாச்சியார் என்பவர் கி.பி.1678-ம் ஆண்டு வீரவ நல்லூர், வடக்கு அத்திப்பட்டி, அகத்து வைக்குடி பற்று ஆகிய பகுதியில் இருந்த நிலங்களைத் தானமாக வழங்கியுள்ளார். அவற்றில் இருந்து சித்திரை பரணி பூஜை, சங்கர மாதம் சிறப்புப் பூஜை, பிரதோஷ பூஜை, கார்த்திகை மாதம் அத்தாளப் பூஜை, திருக் கார்த்திகை நறுநெய்வார்ப்பு, வெஞ்சன வகை, வெள்ளிமலை வேலாயுதப் பெருமாளுக்கு உசர பூஜை ஆகியவற்றின் செலவுக்கு நெல் வழங்கப்பட்டது உட்பட பல தகவல்கள் கல்வெட்டில் உள்ளன.
இந்த சிவபாண்டி ஆண்டார் மடத்துக்கு ஏற்பட்ட கடன் தொகை 1150 ரூபாயை நாடார் சமூகத்தைச் சேர்ந்த சாணார் நயினார் - ஆண்டிச்சி ஆகியோரது மகள் இராமனாச்சியார் வழங்கித் தீர்த்து வைத்துள்ளதை கல்வெட்டு தகவல் விளக்கமாக பதிவு செய்திருக்கிறது. தெற்குப் பக்கம் அமைந்துள்ள 2-வது கல்வெட்டு கி.பி. 1683-ம் ஆண்டு வெட்டப்பட்டுள்ளது. பிள்ளைமார் சமூகத்தவர் பிள்ளையார் பூஜைக்கும், மகேசுவர பூஜைக்கும், விசேஷ பூஜைக்கும் கி.பி. 1678-ம் ஆண்டு நிலதானம் செய்துள்ள செய்தியைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சிவபாண்டி ஆண்டாரின் கல்மடத்துக்கு பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த கணக்கன் பராக்கிரம பாண்டியப் பெருமாள் என்பவரும் பண தானம் செய்துள்ளார். மடத்தின் செலவுகளுக்குத் தானம் செய்யப்பட்ட நிலம், பாட்டம் பணம், கடமைப் பணம் பற்றிய செய்திகள், மடம் மீட்கப்பட்ட செய்தி ஆகியவற்றை கல்வெட்டு குறிப்பிடுகிறது.
தமிழர் வரலாற்று அடையாளமாகத் திகழும் வீரகேரள நல்லூர் கல் மடம் இடிந்து விழும் நிலையிலுள்ளது. எனவே உடனடியாகக் கல் மடத்தையும், கல்வெட்டுகளையும் பராமரித்துப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
குட்நியூஸ்... 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு; ஜனவரி 2-வது வாரத்தில் வழங்க ஏற்பாடு!
இறுதி நாட்களின் பெருந்துயரம் | இன்று நடிகை சாவித்ரி நினைவுதினம்!
வாழ்க்கையை சுழற்றிப் போட்ட சுனாமி... கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மீனவர்கள்!
பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!