பரபரப்பு... கொடைக்கானலில் கடைகளை அடித்து நொறுக்கிய காட்டு யானைகள்... வனத்துறை தடை!

By காமதேனு

கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம் பகுதியில் யானை, தரைக்கடைகளைச் சேதப்படுத்தியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல இன்று தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மோயர் சதுக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் முக்கிய சுற்றுலா பகுதியாக இருந்து வருகிறது . இங்கு பெரும்பாலான சுற்றுலா இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது . குறிப்பாக மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள், உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு செல்வதற்கு வனத்துறையினரிடம் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் .

மேலும் வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற்று செல்லும் பகுதியாக பேரிஜம் ஏரி இருந்து வருகிறது . இங்கு கடந்த 9 நாட்களாக காட்டுயானைகள் முகாமிட்டு இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் சென்று ரசிக்க வனத்துறை தடை விதித்திருந்தது .

மேலும் முக்கிய சுற்றுலாப் பகுதியாக உள்ள மோயர் சதுக்கம் பகுதியில் நேற்று இரவு காட்டுயானைகள் அப்பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட தரைக்கடைகள் முழுவதையும் சேதப்படுத்தியுள்ளன . இதனையறிந்த தரைக்கடை வியாபாரிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் .

தூண்பாறை செல்லும் பாதை

இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள், தரைக்கடை வியாபாரிகள் அங்கு செல்வதற்கு வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர் . இதனால் கொடைக்கானலுக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதனிடையே காட்டு யானைகளை விரட்டுவதில் வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் சுற்றுலாப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானைகளை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரைவாக விரட்ட வேண்டும் என்பதே அங்கு சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் சிறு வியாபாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE