‘பவர் ஸ்ப்ரேயரில்’ நேரடி நெல் விதைப்பு: மாத்தி யோசித்த தஞ்சை விவசாயி புது முயற்சி!

By எஸ்.கல்யாணசுந்தரம்

திருச்சி: பவர் ஸ்பிரேயரை பயன்படுத்தி நேரடி நெல்விதைப்பில் ஈடுபட்டு வரும் தஞ்சாவூர் விவசாயியின் முயற்சிக்கு விவசாயிகளிடையே வரவேற்பு கிடைத்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து முறையாக தண்ணீர் திறக்கப்படும்பட்சத்தில், குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 20 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும்.

இதில், பெரும்பாலும் நாற்றங்கால் தயார் செய்து, நாற்று விட்டு, அதை பறித்து வயல்களில் நடுவது தான் வழக்கமாக செய்யப்படும் சாகுபடி முறை. கடந்த சில ஆண்டுகளாக கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக இயந்திர நடவு முறையை விவசாயிகள் பலரும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், டெல்டாவில் கடலோரப் பகுதிகள், நிலத்தடி நீர் வசதியில்லாத, அதிகம் தண்ணீர் சென்று பாயாத கடைமடைப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பெரும்பாலும் நேரடி நெல் விதைப்பு செய்யப்படும். இந்த முறையில் அதிக மகசூல் கிடைக்காது என்றாலும், நாற்றங்கால் தயாரிப்பு, நாற்று பறித்தல், நடவு செய்தல் உள்ளிட்ட செலவுகள் மிச்சம் என்பதால், விவசாயிகள் இந்த முறையை கடைப்பிடித்து வருகின்றனர்.

விவசாயி எஸ்.வெங்கடேஷ்

இந்நிலையில், இந்த நேரடி நெல் விதைப்பு முறையில், விதைகளை வயல்களில் தூவுவதற்கு பதிலாக, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க பயன்படுத்தப்படும் விசை தெளிப்பான் இயந்திரம்(பவர் ஸ்பிரேயர்) மூலம் விதை நெல்லை வயலில்நேரடி விதைப்பாக தெளிக்கும் முறையை செயல்படுத்தி வருகிறார் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள கோவிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எஸ்.வெங்கடேஷ்.

இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: இந்த இயந்திர தெளிப்பான் மூலம் விதைகளை தெளிக்கும்போது விதை தெளிப்பு சீராக இருக்கும். இயந்திரத்திலிருந்து உந்துதலுடன் வேகமாக சென்று விதைகள் மண்ணில் புதைந்து, நன்கு முளைக்கும். மேலும், நடவுப் பயிர் போன்று பயிர்கள் நன்கு தூர்பிடித்து வளரும்.

விதை ரகம், மண்ணின் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப ஏக்கருக்கு 5 கிலோ முதல் 15 கிலோ விதைகள் போதுமானது. நடவு செய்த வயலில் கிடைப்பது போன்றே மகசூலும் அதிகளவில் கிடைக்கும்.

கடந்த 3 ஆண்டுகளாக எனது வயலில் இந்த முறையில் தான் விதைப்பு செய்து வருகிறேன். நல்ல மகசூல் கிடைக்கிறது. இதைப் பார்த்து, மற்ற விவசாயிகள் தங்களுக்கும் விதைப்பு செய்து தருமாறு கேட்கின்றனர். இதற்காக ரூ.500 கூலி வாங்குவதுடன், விதைப்பு முதல் அறுவடை வரை தேவையான ஆலோசனைகளை அளித்து வருகிறேன்.

ஒவ்வொரு வயலுக்கும், காற்றின் போக்குக்கும், விதைக்கும் ஏற்றவாறு செயல்பட வேண்டும். அதை அனுபவத்தின் மூலம் சரியாக செய்து வருகிறேன் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE