டெங்கு காய்ச்சலால் 778 பேர் பலி - 1,57,172 பேருக்கு சிகிச்சை; திணறும் தேசம்!

By காமதேனு

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவலால், 778 பேர் உயிரிழந்ததாகவும் 1,57,172 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. முறையான முன்னெச்சரிக்கை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் நோய்த் தொற்று அதிகரித்ததாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறித்து வங்கதேச நாட்டு சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, “நாட்டில் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 778-ஆக அதிகரித்துள்ளது. இந்த நோயால் இதுவரை 1,57,172 போ் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும், டெங்கு பாதிப்பு குறித்து முழுமையாக பதிவு செய்யப்படாததால், உண்மையான உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று ஐ.நா.வின் சிறுவா் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள முத்தா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான டெங்கு நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்து டாக்கானில் உள்ள மூத்தா மருத்துவர் கல்லூரி மருத்துவமனையின் இயக்குநர் முகமது நியாதுஸ்மான் கூறுகையில், “டெங்கு ஒழிப்பில் நிலையான கொள்கை இல்லாததால் வங்கதேசம் இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க போராடி வருகிறோம். அதற்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்று இங்குள்ள பலருக்கும் தெரியவில்லை. டாக்கா மற்றும் பிற பெரிய நகரங்களுக்கு வெளியே செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களுக்கு டெங்குவை கையாள்வதில் சிறந்த பயிற்சி தேவை” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE