கட்டுப்பாட்டுக்குள் வந்த 58 வார்டுகள்... கேரளா மக்களை நடுங்க வைக்கும் நிபா வைரஸ்!

By காமதேனு

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கை கேரளா அரசு தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகிறது. நிபா நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 24 வயதான சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு நிபா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவுவதைத் தடுக்க மாநில அரசு பல நடிவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிபா பரவல் காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், ‘’நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் 700 பேர் தொடர்பில் இருந்துள்ளதால் நோயாளிகளின் தொடர்பு பட்டியல் கவலைக்குரியதாக மாறியுள்ளது.

மேலும் கோழிக்கோட்டில் 9 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க ICMR-ல் இருந்து மோனோக்ளோனல் ஆன்டிபாடியை பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இது நிபாவுக்கு எதிராக செயல்படுகிறது என்பதற்கு மருத்துவ ஆதாரம் இல்லை. ஆனால், தற்போது மட்டுமே இது கிடைக்கக்கூடிய சிகிச்சை ஆகும். அச்சிறுவன் வென்டிலேட்டர் ஆதரவில் உள்ளார்.

சுமார் 700 பேர் நோயாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்றும் அவர்களில் 77 பேர் அதிக ஆபத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் நிலையாக இருப்பதாக அமைச்சர் கூறினார். மேலும் இந்த முறை கேரளாவில் காணப்படும் நிபா வைரஸ் வங்களாதேச மாறுபாடாகும். இந்த மாறுபாட்டின் தொற்று பரவல் விகிதம் குறைவாக இருந்தாலும், அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த மாறுபாடு மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுகிறது.

காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில் சிரமம், வாந்தி ஆகிய்வை இதன் அறிகுறிகளாகும். சில நேரங்களில் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி மூளை காய்ச்சலை ஏற்படுத்தும். இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்படலாம்’’ என அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

அதிக ஆபத்துள்ள நிபா நோயாளிகள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நிபாவால் உயிரிழந்த இருவரின் வழித்தடங்கள் வெளியிடப்பட்டதால் மக்கள் அந்த வழிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில், திருவிழாக்கள் மற்றும் விழாக்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதைத் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கோழிக்கோடு மாவட்டத்தின் வடகரா தாலுக்காவில் உள்ள 9 பஞ்சாயத்துகளில் உள்ள 58 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மருந்தகங்கள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை.

கட்டுப்பாட்டு மண்டலங்கள் வழியாக தேசிய நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் பேருந்துகள் அல்லது வாகனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE