மழை மற்றும் நீர் வரத்து குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,623 கன அடியாக உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் மற்றும் மழை காரணமாக கடந்த 3-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சில சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. ஏரிக்கு நீர்வரத்தை பொறுத்து, உபரிநீர் திறந்துவிடுவது படிப்படியாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் மழை ஓய்ந்ததால், மீண்டும் இயல்பான வானிலை திரும்பியுள்ளது.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர்வரத்து கணிசமாக குறையத் தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி 24 அடி உயரம் கொண்ட ஏரியில் 22.64 அடி தண்ணீர் உள்ளது. மொத்த தண்ணீர் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. தற்போது 3284 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
மேலும் ஏரிக்கு நீர் வரத்தும் வினாடிக்கு 1091 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் கோடைகால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,623 கன அடியாக உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்படும் என ஏரியை பராமரித்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரியின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.